'போராடும் விவசாயிகளை அடித்து மண்டையை உடையுங்கள்..' ஹரியானா மாஜிஸ்திரேட் அடாவடி பேச்சு.. வைரல் வீடியோ
சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராகச் சாலை மறியல் செய்யும் விவசாயிகளை அடித்து மண்டையை உடையுங்கள் என போலீசாரிடம் துணை நிலை மாஜிஸ்திரேட் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இன்னும் முடியவில்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படவில்லை,

போலீசார் தடியடி
இந்நிலையில், கட்டாரியா கர்னல் பகுதியில் இன்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரியா வந்திருந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் முதல்வர் மனோகர் லால் கட்டாரியாவுக்கு எதிராக அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளைக் களைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
|
வைரல் வீடியோ
இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்துவதற்கு முன் விவசாயிகளை அடித்து மண்டையை உடைக்கும்படி போலீசாரிடம் துணை நிலை மாஜிஸ்திரேட் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் போலீசாரிடம் பேசும் கர்னல் துணை நிலை மாஜிஸ்திரேட் ஆயுஷ் சின்ஹா, "உங்களுக்கான வேலை மிகவும் எளிமையானது மற்றும் தெளிவானது. அவர்கள் (போராடும் விவசாயிகள்) யாராக இருந்தாலும், இங்கே வர விடக்கூடாது.

மண்டையை உடையுங்கள்
நீங்கள் உங்கள் லத்தியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலுவாக அவர்களை அடியுங்கள். இதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டாம். இந்த இடத்தில் நான் எதாவது ஒரு போராடும் விவசாயியைப் பார்த்தாலும்கூட அவரது தலை உடைந்திருக்க வேண்டும். இதில் யாருக்காவது சந்தேகம் உள்ளதா?" எனக் கேட்கிறார். அதற்கு அந்த போலீஸ் படை இல்லை எனப் பதில் கூறுகிறது. இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே நிலைமை மோசமானால் தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கும்படி மட்டுமே போலீசாருக்கு அறிவுறுத்தியதாகத் துணை நிலை மாஜிஸ்திரேட் ஆயுஷ் சின்ஹா விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் கண்டனம்
இருப்பினும், அமைதியான முறையில் போராடும் விவசாயிகளைத் தாக்கி மண்டையை உடைக்கச் சொன்ன இந்த அதிகாரிக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, "முதல்வரே, இன்று நீங்கள் ஹரியானாவின் ஆன்மா மீதே லத்திகளின் மழை பொழிய வைத்துள்ளீர்கள். விவசாயிகள் சிந்திய ரத்தத்தை வரும் தலைமுறையினர் என்றும் நினைவில் கொள்வார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் எதிர்ப்பு
எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பாஜக தலைவர் வருண் காந்தி, இதற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து வருண் தனது ட்விட்டரில், "இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோவாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அதிகாரி அப்படி கூறியிருக்கக் கூடாது. இல்லையெனில், இது மிகவும் தவறான ஒன்று. நமது சொந்த குடிமக்களுக்கு எதிராகவே தாக்குதல் நடத்துவதை இந்தியாவில் ஏற்றுக்கொள்ள முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications