பஞ்சாப் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவு.. வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்? யாருக்கு மக்கள் ஆதரவு
சண்டிகர் : பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக பதட்டமான வாக்குச்சாவடிகள் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்தில் மே மாதம் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி அங்கு தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கூறியது.
இந்த நிலையில், குரு ரவீந்தரதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து தேர்தல் தேதி பிப்ரவரி 20ஆம் தேதிக்கு மாற்றி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது..

பஞ்சாப் காங்கிரஸ்
பஞ்சாபில் தற்போதைய ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் தேர்தலில் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து. முதல்வர் வேட்பாளர் விவகாரம் திடீரென வெடித்த நிலையில் தற்போதைய முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தும் மீண்டும் ஆட்சி அமைக்க அங்கு காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. பல திட்டங்கள் குறித்து வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர்களை கவர அக்கட்சி முனைப்பாக இருந்தது.

அரசியல் கட்சிகள் மும்முரம்
காங்கிரஸ் மட்டுமல்லாது இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் மற்றும் அம்ரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் உள்ளிட்டவை களம் கண்டு பலப்பரீட்சை நடத்தின. வேட்பாளர் தேர்வு , பிரச்சாரம், வாக்காளர்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் என அனுதினமும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த டெல்லியை போன்று எப்படியாவது பஞ்சாபிலும் ஆட்சி அமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியும் முனைப்பு காட்டியது.

விறுவிறு வாக்குப்பதிவு
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மிகவும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பஞ்சாப் மாநில வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். இதேபோல பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங், காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு நிறைவு
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 5 மணி நிலவரப்படி பஞ்சாபில் 63.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக பஞ்சாபின் மாவட்டத்தில் 73.45 சதவீத வாக்குகள் பதிவாகின. சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நீதிபதிகள் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வருகின்ற மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications