யார் இந்த துஷ்யந்த் சவுதாலா? இந்தியாவை கவனிக்க வைத்த 31 வயது இளைஞர்
Recommended Video
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு காலம் நிறைவடையாத நிலையில் 10 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறார் துஷ்யந்த் சவுதாலா.
31 வயது இளைஞரான இவருக்கு ஒரு மாநிலத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி கிடைத்தும் அதை அவர் சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள தவறியுள்ளார்.
துஷ்யந்த் சவுதாலாவுடன் கைகோர்த்து ஹரியானாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே காய் நகர்த்திய நிலையில், இப்போது சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது பாஜக.

பரம்பரை அரசியல்
துஷ்யந்த் சவுதாலா யார் என்றால் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் வழிப் பேரன் ஆவார். மேலும், பாரம்பரிய அரசியல் குடும்பத்தை பின்னணியாக கொண்ட துஷ்யந்த், மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப்பேரனும் ஆவார்.

26 வயதில் எம்.பி.
துஷ்யந்த் சவுதாலா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படித்தவர். கடந்த 2014-ம் ஆண்டு இந்திய தேசிய லோக் தளம் கட்சி சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு நாட்டிலேயே இளம் வயது எம்.பி.யாக 26 வயதில் நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

கட்சியிலிருந்து நீக்கம்
இந்திய தேசிய லோக் தளம் கட்சியிலிருந்து கடந்த 2018-ம் ஆண்டு துஷ்யந்த் சவுதாலாவும் அவரது தந்தை அஜய் சிங் சவுதாலாவும் நீக்கப்பட்டனர். சொந்த தாத்தாவே தன்னையும், தனது தந்தையையும் கட்சியிலிருந்துநீக்கியதால் அரசியலில் தனது வலிமையை காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு வருகிறது.

புதுக்கட்சி
ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஓம் பிரகாஷ் சவுதாலாவை தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடாமல், சிலர் கட்டுபடுத்தி வைத்துக்கொண்டு ஆட்டம் போடுவதாக (சொந்த சித்தப்பாவை)விமர்சித்தார் துஷ்யந்த். மேலும், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சூட்டோடு சூடாக ஜனநாயக ஜனதா கட்சியை தொடங்கி அரசியலில் முன்பைக் காட்டிலும் தீவிரம் செலுத்தத் தொடங்கினார்.

கடும்போட்டி
கட்சி தொடங்கி ஓராண்டு காலம் கூட நிறைவடையாத நிலையில், துஷ்யந்திற்கு ஹரியானா மக்கள் அளித்துள்ள பரிசு 10 எம்.எல்.ஏக்கள். இது அவரது கடும் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்று கூறலாம். காரணம் அந்தளவுக்கு பாஜகவும், காங்கிரசும் கடும்போட்டி கொடுத்தபோதும் தனது கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார்.

தவறவிட்டார்
துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் கட்சியுடன் கைகோர்த்து ஹரியானாவில் ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே நேற்று முதல் தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது வல்லமையை நிரூபிக்க தவறிவிட்டார் இந்த துஷ்யந்த்.

பொறுமை
இந்நிலையில், இரண்டு கட்சி தலைமைகளும் தனக்கு முதலமைச்சர் பதவி தரும் என எதிர்பார்த்து காத்திருந்த துஷ்யந்திற்கு இப்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சுயேச்சைகள் ஆதரவுடன் மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்கவுள்ளது பாஜக. இருப்பினும் வரும் ஐந்தாண்டுக்குள் துஷ்யந்தின் ஆதரவு காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு தேவைப்படும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications