தொடக்கூடாத இடம்.. பெண் நிர்வாகிக்கு காங்கிரஸ் மேடையிலேயே பாலியல் தொல்லை.. யார் அந்த பிரமுகர்?
சண்டிகர்: ஹரியானாவில் தேர்தல் பிரசார மேடையில் அனைவரின் முன்பும் பெண் நிர்வாகிக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா சட்டசபை தேர்தல் இன்று அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளது. ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சி இடையே மும்முனை போட்டி உள்ளது.

இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அக்டோபர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்து விடும்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் பெண் நிர்வாகி ஒருவரும் பங்கேற்றார். அவர் மேடையில் முன்புறத்தில் நின்றார். அப்போது பின்னால் நின்ற காங்கிரஸ் நிர்வாகி அந்த பெண்ணின் உடலில் தொடக்கூடாத இடத்தை தொட்டுள்ளார்.
இதனை பார்த்தவுடன் அருகே இருந்தவர்கள் அந்த நபரின் கையை தட்டிவிட பெண் நிர்வாகி நாகரீகம் கருதி பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வரும் நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் எம்பி குமாரி செல்சா, பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகியிடம் பேசியுள்ளார்.
இதுபற்றி எம்பி குமாரி செல்சா கூறுகையில், ‛‛நான் அந்த பெண்ணிடம் பேசினேன். அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது. இதை விட மோசமான செயல் என்று ஒன்றுமே இருக்க முடியாது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.
அதேபோல் ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், ‛‛இதுதான் அவர்களின் (காங்கிரஸ்) கலாசாரம். இது அவர்களின் டிஎன்ஏவில் உள்ளது. இதுதொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை என்பது எடுக்கப்படும். பெண்கள் என்பவர்கள் சமூகத்தின் ஒரு அங்கம். அவர்களுக்கு எதிரான இந்த செயலை என் அரசு பொறுத்து கொள்ளாது'' என கூறினார். இருப்பினும் தற்போது வரை பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை. மேலும் அந்த நபரும் மேடையில் பின்வரிசையில் நின்றதால் வீடியோவிலும் அவரது முகம் என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications