"ஆட்டுக்கறி"ங்க.. ஜம் ஜம் ரம்ஜான்.. களைகட்டும் கால்நடை சந்தைகள்.. குவியும் வியாபாரிகள்.. செம குஷி
சென்னை: ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால், அதற்கான ஆயத்த வேலைகளில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.. இந்நிலையில், தமிழகத்தின் சந்தைகளில் கால்நடை விற்பனை சூடுபிடித்துள்ளது.
ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் வாழும் இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஈகைத் திருநாளன்று, ஏழை மக்களுக்கு அரிசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்கிவருகிறார்கள்.. அதேபோல, அரபு மாதங்களில் ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வாலின் முதல்நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

கொண்டாட்டம்: பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது... அந்தவகையில், வரும் வியாழக்கிழமையன்று 28வது நோன்பையும், வெள்ளிக்கிழமையன்று 29வது நோன்பையும் நோற்க உள்ளனர்.. ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது.. இந்த பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.. வழக்கமாக இந்த வருடமும், பண்டிகையையொட்டிஇ தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டி உள்ளது.
வியாபாரிகள் : சென்னையை பொறுத்தவரை, 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் ஆடுகள் வரையில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக வியாபாரிகள் சொல்கிறார்கள்.. இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டிறைச்சி வியாபாரிகள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராயபுரம் அலி சொல்லும்போது, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் 30 ஆயிரம் ஆடுகள் வரையிலும் சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆட்டு தொட்டிகளில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும் என்கிறார்.
அதாவது, ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 என்கிற வகையில் வழக்கமான நாட்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், ரம்ஜானையொட்டி 50 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதனால், சில்லரை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு விற்பனை விலை ரூ.850 முதல் ரூ.900 வரையில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.. அதேபோல, அசைவ ஓட்டல்களில் பிரியாணி ஆர்டரும் குவிந்து கொண்டிருக்கிறது. பக்கெட் பிரியாணிக்கும் ஆர்டர் வந்தவண்ணம் உள்ளது.

ஆடுகள் விற்பனை: அதேபோல, பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் கூட்டம் இன்றே அலைமோத துவங்கிவிட்டது.. பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக ராஜபாளையம், தென்காசி, பொட்டல்புதூர், வீராணம், மேலப்பாளையம், கடையநல்லூர், சங்கரன்கோவில், பத்தமடை, கேரளாவின் தென்மலைப் பகுதிகள் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிக அளவில் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் குவிந்திருந்தனர்.
ஆடுகளின் விற்பனையானது ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது... குறிப்பாக, காங்கேயம், ஓசூர் ஓட்டேரி, கிர் இன காளைகள், நாட்டு ரக காளைகள், எருமைகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. பாவூர்சத்திரம் ஆடுகள் விற்பனை சந்தையில் இன்று மட்டும் ரூ.1 கோடி அளவில் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கும் ரம்ஜான் பண்டிகை, வருகிற 22-ந்தேதி சனிக்கிழமை 'கிருத்திகை' வருகிறது.. இந்த நாளில் முருக பக்தர்களில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்க்க நினைப்பார்கள். அதனால், தங்களது இந்து நண்பர்கள் பலருக்கு, முஸ்லிம்கள் மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று, பிரியாணி தயார் செய்து கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்களாம்..












Click it and Unblock the Notifications