1000 ஆண்டு பழமையான சிலைகளை பதுக்கி வைத்த ஸ்தபதி..அதிரடியாக மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்
சென்னை: கும்பகோணம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 7 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி என்ற ஸ்தபதிக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களாகவே விலைமதிக்க முடியாத பல்வேறு தொன்மையான சிலைகளை மீட்டெடுத்து வருகின்றனர்.

பழைய வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு, காணாமல் போன பல சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 8 பழங்கால சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசிலாமணி என்ற ஸ்தபாதிக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக சக்தியம்மன், 9 அடி உயர சிவகாமி அம்மன், விஷ்ணு, இரு புத்தர் சிலைகள், ஆண்டாள், நடராஜர், ரமண மகரிஷி ஆகிய சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள், சிலையை திருடியவர்கள் குறித்து சிலைகளை வைத்திருந்த மாசிலாமணியிடம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை பிராட்வே பிடாரியார் கோவில் தெருவில் பமீலா இமானுவேல் என்பவர் வீட்டில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்த பிரிவின் போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி ஆலோசனையின்பேரில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. உடனே தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். இதில் தட்சிணாமூர்த்தி சாமி சிலை முதலில் சிக்கியது. தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை அலசி ஆராய்ந்தபோது ரகசிய அறை ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த அறையில், முருகன், வள்ளி, தெய்வானை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு ஆகிய சாமி சிலைகளும், பீடத்துடன் கூடிய 2 பெண் தெய்வங்கள், என 9 சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications