சூப்பர்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா..இந்த 7 மாவட்டங்களில் மட்டும் சதமடிக்கும் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 60-வது நாளாக குறைந்துள்ளது. சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 100-ஐ கடந்து வருகிறது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இந்த அளவுக்கு கொரோனாவை குறைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை
இதனால் மொத்த பாதிப்பு 25,39,277 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 3 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 33,782 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,439 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,78,778 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

கோவை தொடர் முதலிடம்
26,717 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,33,149 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,49,62,323 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 141 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு நேற்று இருந்ததை விட சற்று குறைந்துள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

காஞ்சிபுரம்
கோவையில் மட்டும் 204 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 111 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 38 பேருக்கும், மதுரையில் 28 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 42பேருக்கும், திருவள்ளூரில் 61 பேருக்கும், திருச்சியில் 66 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 106 பேருக்கும், விருதுநகரில் 18 பேருக்கும், ஈரோட்டில் 129 பேருக்கும், சேலத்தில் 133 பேருக்கும், நாமக்கல்லில் 55 பேருக்கும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர். கோவை, ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 100-க்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications