ஏழை பெண்களுக்கு தலா ஒரு லட்சம் தருவது சாத்தியமே! டேட்டாவுடன் விளக்கிய ப.சிதம்பரம்
சென்னை: காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் தரப்படும் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அறிவிப்பு எப்படி சாத்தியப்படும் என்பது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புள்ளி விவரங்களுடன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்: அண்மையில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் பல்வேறு கவர்ச்சிரக அறிவிப்புகள் இடம் பெற்றன. குறிப்பாக ஏழை குடுபங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் தரப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல, இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கொடுப்பது சாத்தியமா? என பல்வேறு தரப்பினரும்கேள்வி எழுப்பி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விளக்கமளித்து பேசியிருக்கிறார். ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு: இந்தியாவுடைய ஜிடிபி நடப்பு ஆண்டில் 273 லட்சம் கோடி ரூபாய். இது கான்ஸ்டண்ட் விலை என்று சொல்லப்படும் நிலையான விலையில்.. நடப்பு விலையில் இது இன்னும் அதிகம். ஏழை மக்களை ஏழ்மையில் இருந்து அவர்களை விடுவிக்க.. ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம் என்பது உங்களுக்கு வியப்பாக தெரிகிறது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒரே நாள்.. ஒரே அண்டில் 30 சதவீதத்தில் இருந்து 22 சதவிகிதமாக கார்ப்பரேட் வரியை குறைத்தார்களே.. அந்த ஒரு அறிவிப்பில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தரப்பட்டது. 4, 5 ஆண்டுகளாக.. ஆண்டுக்கு ஆண்டு அது தரப்படுகிறது.
கணக்கு போடாமல் அறிவிக்கவில்லை: ஆக பணம் இல்லை என்று கணக்கு பண்ணாதீர்கள்.. ஒரு சதவிகிதம் ஜிடிபி என்று வைத்தால் கூட.. 273 லட்சம் கோடியில் ஒரு சதவிகிதம் என்று வைத்தால் கூட போதுமே... எனவே இதெல்லாம் முடியாத காரியம் இல்லை.. நாங்க கணக்கு போடமாலா இதை அறிவித்தோம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை. 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021ல் நடத்தியிருக்க வேண்டும். சமூக பொருளாதார கணக்கெடுப்பு... சாதி வாரி கணக்கெடுப்பு.. வழக்கமான கணக்கெடுப்பு எல்லாவற்றையும் நாங்கள் நடத்துவோம். அதில் ஏழைகள் யார் என்பதை கண்டுபிடிப்போம்.
நிதி ஆயோக் சொல்கிறது 11 சதவிகித மக்கள்தான் ஏழைகள் என்று.. நிதி ஆயோக்கின் தலைமை அதிகாரி 5 சதவிகிதம் தான் ஏழை என்கிறார். 5-ல் இருந்து 11 சதவிகிதம் என்று வைத்துக் கொண்டால் கூட எத்தனை குடும்பங்கள் என வைத்துக்கொள்ளலாம். கணக்கெடுத்த பிறகு அதற்கு எவ்வளவு தேவை என்று கணக்கு போடுவோம்.
புல்லட் ரயிலுக்கு ஏன்: இந்தியாவால் இது முடியும். இந்தியாவின் பொருளாதாரத்தால் இதை தாங்க முடியும். தாங்க வேண்டும். அகமதாபாத்தில் இருந்து மும்பை இடையேயான புல்லெட் ரயில் திட்டத்திற்கு.. ஒரு லட்சத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவு செய்கிறார்கள். எல்லா மக்களுக்கும் பயன்படாத புல்லெட் ரயில் திட்டத்திற்கு.. அதுவும் இரண்டு நகரங்களுக்கு இடையேயான திட்டத்திற்கு இவ்வளவு தொகை செலவழிக்கிறார்கள்.
ஆக.. இதெல்லாம் முடியாது என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன். முடியும். முடியச் செய்வோம். இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு 4.5ல் இருந்து 5 பேர் இருக்கிறார்கள். கணக்கெடுத்தால்தான் நாட்டில் எத்தனை ஏழைகள் என்று தெரியும். 5-ல் இருந்து 11 சதவிகிதம் என்று நிதி ஆயோக் சொல்கிறது. சராசரி எடுத்துக்கொள்ளுங்கள் 8 சதவிகிதம் என்று வையுங்கள்... இந்தியாவில் 140 கோடி மக்கள்..
எப்படி முடியாமல் போகும்?: இதில் 8 சதவிகிதம் என்று எடுத்துக்கொண்டால் ஏறத்தாழ 11.5 கோடி மக்கள்... 11.5 கோடியை 5 ஆல் வகுத்தால் 2.22 கோடி குடும்பங்கள்... 2 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கொடுத்தால் 2.22 லட்சம் கோடிதான்.. கார்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் 1.45 லட்சம் கோடி தருகிறீர்கள் அல்லவா.. 2.20 லட்சம் கோடியை ஏன் இந்திய பொருளாதாரம் தாங்காது..
இரண்டாவது இந்திய பொருளாதாரம் 273 லட்சம் கோடியிலே நிக்காது. ஆண்டுக்கு ஆண்டுக்கு வளரும்.. அப்பொழுது ஏறத்தாழ 2 சதவிகிதம் 1.75 சதவிகிதம் 1.5 சதவிகிதம் தான் ஜிடிபியில் தேவைப்படும். அந்த 1.5 சதவிகிதத்தை பொறுத்துக்கொள்ள வேண்டிய கடமை.. ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை இந்திய மக்களுக்கு உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications