அண்ணியார் விருத்தாசலத்தில் அறிவித்த ரூ.1 லட்சம் பரிசு.. "ரெடியா இருக்கீங்களா?" இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?
சென்னை: அண்ணியார் பிரேமலதா தரப்போகும் அந்த ஒரு லட்ச ரூபாய் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புதான் இப்போது விருத்தாசலம் தொகுதி முழுக்க ஹாட் டாபிக்.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக துவங்க உள்ள நிலையில், இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என்பதால் தேமுதிக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.. பிரச்சாரத்தில் அண்ணியார் கொடுத்த அந்த வாக்குறுதி, தேர்தல் ரிசல்ட்டில் மேஜிக் செய்யுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்..
தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.. குறிப்பாக, விருத்தாசலம் தொகுதியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அரசியல் வட்டாரங்களில் தற்போதே எகிறத் தொடங்கியுள்ளது..

இன்று மாலைக்குள் இந்தத் தொகுதியின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும் நிலையில், பிரச்சாரத்தின் போது பேசப்பட்ட அந்த 'ஒரு லட்ச ரூபாய் கிப்ட்' விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது..
அண்ணியார் 1 லட்சம் ரூபாய் பரிசு
விருத்தாசலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தேமுதிக நிர்வாகி சேகர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 70 பூத்களில், எந்த பூத்தில் பிரேமலதா அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ, அந்த பூத் முகவர்களுக்கு அண்ணியார் கையால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதைக் கேட்டு மேடையிலேயே புன்னகைத்த பிரேமலதா விஜயகாந்த், "யாருக்கெல்லாம் அந்த ஒரு லட்ச ரூபாய் வாங்க விருப்பம்? நீங்கள் ரெடியா?" என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருந்தார்.. இந்தத் தகவல் அப்போது காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், இன்று மாலை அந்தப் பரிசு யாருக்குச் செல்லப்போகிறது என்பது தெரிந்துவிடும்..
2006-ல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வென்ற இதே விருத்தாசலத்தை, இந்த முறை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் பிரேமலதா விஜயகாந்த் களமிறங்கினார்..
கேப்டன் விட்டுச்சென்ற பணி
"உங்களுடன் தங்குவதற்காக இங்கேயே வீடு பார்த்துவிட்டேன்.. இனி விருத்தாசலம்தான் என் முகவரி" என்று அவர் பிரச்சாரத்தில் முழங்கியது உள்ளூர் மக்களிடம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.. கேப்டன் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வேன் என்றும், விருத்தாசலத்தை மாவட்ட தலைநகராக மாற்றுவேன் என்றும் அவர் கொடுத்த வாக்குறுதிகள் வாக்குப்பெட்டிகளில் எதிரொலித்திருக்கிறதா என்பது இன்று தெரிந்துவிடும்..
இங்கு பிரேமலதா விஜயகாந்திற்கும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் தமிழரசி ஆதிமூலத்திற்கும் இடையேதான் பிரதானப் போட்டி நிலவுகிறது.. திமுக கூட்டணியின் பலத்துடன் பிரேமலதா களம் கண்டாலும், பாமக தனது பழைய செல்வாக்கை நிரூபிக்க துடிக்கிறது.. தவெக வேட்பாளர் எஸ்.விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஆனந்தி ஆகியோர் பிரிக்கும் வாக்குகள், யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி..
பலம் தரும் திமுக தேர்தல் அறிக்கை
ஆனால், பிரேமலதாவுக்கு என தனி செல்வாக்கும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினரின் வாக்குகளோடு, திமுகவின் தேர்தல் அறிக்கையும் தனது பலமாக இருப்பதால் தங்களுக்கே வெற்றி என்று ஆரம்பம் முதலே உறுதியாக சொல்லி வருகிறார்கள் தேமுதிகவினர்.
சாதி ரீதியான வாக்கு வங்கி ஒருபுறம் இருந்தாலும், தொகுதியின் அடிப்படைப் பிரச்சனைகளான சிட்கோ முடக்கம் மற்றும் சாலை வசதிகள் ஆகியவற்றிற்கு யார் தீர்வு காண்பார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.. அண்ணியார் அறிவித்த அந்த 'லட்ச ரூபாய்' ஜாக்பாட் தொண்டர்களுக்குக் கிடைக்குமா? அல்லது விருத்தாசலம் தொகுதி மீண்டும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்திக்குமா? மாலை வரை காத்திருப்போம்..!!












Click it and Unblock the Notifications