கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தவர்கள் மறந்தும் இந்த ஒரு தவறை செஞ்சுடாதீங்க.. வாழ்க்கையே போயிடும்
சென்னை: வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள், வாழ்வில் முன்னேற வேண்டிய நிலையில் செய்யும் ஒரு தவறு,அவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் வீணாக்கி விடுகிறது. அதுதான் கடன். கடன் வாங்குவதை சொல்லவில்லை. கடன் கொடுப்பதை சொல்கிறேன். தயவு செய்து கடன் கொடுத்து விடாதீர்கள்.
வாழ்வில் சிலர் இருப்பார்கள், அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தை நன்றாக சாப்பிட்டு, நல்ல உடை அணிந்து, நல்ல சொகுசான வசதிகளுடன் வீட்டில் வாழ்வார்கள். பிள்ளைகளை பெரிய பள்ளியில் படிக்க வைப்பார்கள்.கடைசி வரை சேமிப்பு என்பது பெரிதாக அவர்களுக்கு இருக்காது.

ஆனால் வாழ்வில் சிலர் இருப்பார்கள், அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பிற்காக பெருந்தொகையை எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில் உணவு, உடை மற்றும் வீட்டிற்கு குறைந்த அளவே செலவு செய்வார்கள். பிள்ளைகளையும் அரசு பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ பெரிய தொகையை செலவழிக்காமல் சேர்த்துவிட்டு படிக்க வைப்பார்கள்.
ஆடம்பர வாழ்வை விரும்பாத இவர்கள், சினிமாவிற்கோ, ஓட்டலில் சென்று சாப்பிட்டோ பணத்தை வீணடிக்க மாட்டார்கள். வாழ்வில் ஒவ்வொரு ரூபாயையும் பார்த்து பார்த்து செலவு செய்வார்கள். இறுதியாக தங்கள் வாழ்வின் பெரும்பாதி கழிந்த பின்னர், பெரும் சேமிப்பை கையில் வைத்திருப்பார்கள்.
அதேநேரம் அன்றாடம் விதம் விதமாக சாப்பிட்டு ,உடை அணிந்து பெரிய பள்ளியில் படிக்க அதிக செலவு செய்து, கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் கடனானியாகிவிடுவார்கள். அவர்கள் வாழ்வின் பெரும்பகுதி கழிந்த பின்னர் பெரும்கடன் தான் இருக்கும். இதுதான் சேமிப்பவர்களுக்கும் செலவு செய்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
சேமிப்பு: இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா, ஆடம்பர பிரியர்கள் கடன் வாங்குவது வங்கியில் மட்டுமல்ல, சுற்றியுள்ள நண்பர்கள், உறவினர்களிடமும் வாங்குவார்கள். அவரிடம் இருக்கும் கார், வீடு போன்ற வசதிகளை பார்த்து, வாழ்வில் கஷ்டப்பட்டு சேமித்தவர்கள் கடன் கொடுக்கிறார்கள். இதையே அவர்கள் மூலதனமாக பார்த்து, அதிக கடன் வாங்குகிறார்கள்.
கடன் உத்தரவாதம்: உதாரணமாக சொல்வது என்றால், ஒருவர் ஆடம்பரமாக வீடு ஒன்றை கட்டுகிறார். அதற்காக ஏராளமானோரிடம் கடன் வாங்குகிறார். வீட்டின் பெயரில் வங்கியிலும் கடன் வாங்கிவிடுகிறார். ஆனால் நம்பிக்கை மற்றும் நண்பர்கள் என்ற அடிப்படையில் லட்சங்களில் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்திற்கு ஒரு சில மாதங்கள் வட்டி மட்டும் ஒழுங்காக அவர்கள் தருவார்கள். அதன்பின்னர் முதலில் வட்டி வாங்க முடியாமல் , பின்னர் அசலும் வாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அதாவது வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் லட்சங்களை கடன் கொடுப்பார்கள். கடைசியில் கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் போய் அவதிப்படுவார்கள்.
மிக ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர்கள் பலர், செய்யும் பெரும் தவறு, நண்பர்கள் உறவினர்களுக்கு கடன் கொடுப்பது தான். கடன் யாருக்கும் கொடுக்காதீர்கள். அவசரத்திற்கு கொடுக்கிறீர்கள் என்றால், 5 ஆயிரம் 10 ஆயிரம் என்கிற அளவில் (உங்கள் சக்திக்குள் ) கொடுங்கள். அதுவும் திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் தராதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர் கேட்கிறார் என்பதற்காக இதை கொடுக்கலாம். இது வந்தாலும் வராமல் போனாலும் பெரிய நஷ்டம் இல்லை. மாறாக பல ஆயிரங்களிலோ, லட்சங்களிலோ கடன் கொடுக்க வேண்டாம்.
கடன் பாதுகாப்பு: ப்ரோ நோட்டு எழுதி வாங்கி கடன் கொடுக்கலாமா என்றால் அதுவும் சரியான முடிவு அல்ல. இப்போது எல்லாம் கடன் கொடுக்க ஏராளமான நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களை கை காட்டிவிட்டு ஒதுங்கிவிடுங்கள். ஒருவேளை நீங்கள் கடன் கொடுத்தால் சட்டரீதியான பாதுகாப்பு பெற முடியாது. அதையும் மீறி கடன் கொடுத்து தான் ஆக வேண்டும் என்றால், சொத்து பத்திரத்தை உங்கள் பெயரில் மாற்றி எழுதி பத்திர அலுவலகத்தில் பதிந்து கொள்ளுங்கள். இத்தனை தேதிக்குள் தராவிட்டால் அது உங்களுக்கு சொந்தமாகும் என்ற அடிப்படையில் சொத்து பத்திரத்தை பதிவு செய்தால் மட்டுமே கடனுக்கு உத்தரவாதம் கிடைக்கும்.
அதேநேரம் முக்கியமான விஷயம். தயவு செய்து வாழ்க்கையில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். உங்களை போலவே பலரிடம் சிலர் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிடுகிறார்கள். இங்கே வங்கியில் கடன் வாங்கியிருந்தால், வங்கிகளுக்கு சட்டபாதுகாப்பு உள்ளது, ஆனால் கடன் கொடுக்கும் பொதுமக்களின் கடனுக்கு சட்டபாதுகாப்பு இல்லை.
தான் திவாலாகிவிட்டதாக மஞ்சள் நோட்டிஸ் விட்டுவிட்டால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே சிறுக சிறுக கஷ்டப்பட்டு சேமித்தவர்கள் வாழ்வில் யாருக்குமே மறந்தும் கடன் கொடுத்துவிடாதீர்கள். கடன் வாங்குவது மட்டும் பிரச்சனையை உருவாக்காது. கடன் கொடுப்பது பிரச்சனையை உண்டாக்கும். கடன் அன்பை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையே முறித்துவிடும். உங்களிடம் அதிக பணம் இருந்தால் வங்கியில் சேமியுங்கள், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் உள்ளன. மியூச்வல் பண்ட் முதலீடுகள் உள்ளன. இவை எல்லாம் பணத்திற்கு பாதுகாப்பு தரும். ஆனால் நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்தால் பாதுகாப்பு இல்லை.












Click it and Unblock the Notifications