ஆந்திராவில் ஒரே பள்ளியில் பலருக்கு கொரோனா.. இந்த நேரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு சரியானதா
சென்னை: ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்த சில நாட்களிலே ஒரே பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது சரியான முடிவு தானா என்ற கேள்வியும் இயல்வாகவே எழுகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவ தொடங்கியது. கொரோனா பரவ தொடங்கிய போது, அந்த இந்தளவு மோசமானதாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இருப்பினும், சில வாரங்களிலேயே நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பது புரியத் தொடங்கியது. கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதலில் பள்ளிகள் மூடப்பட்டன.

குழந்தைகளுக்கு கொரோனா
அதன் பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா முதல் அலை குறைந்த சமயத்தில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது பல்வேறு பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டன. தமிழ்நாட்டிலும் கூட பள்ளிகள் திறக்கப்பட்ட போது, தஞ்சை மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள். ஆசிரியர்கள் எனப் பலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

+2 தேர்வுகள் ரத்து
மேலும், கொரோனா 2ஆம் அலையும் மெல்லத் தொடங்கியது. இதையடுத்து பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. மீண்டும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கும் முறை தொடங்கப்பட்டன. ஏப்ரல் - மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டத்தால் முழு ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. +2 பொதுத்தேர்வும்கூட ரத்து செய்யப்பட்டு, 10,11 மற்றும் +2 பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டன.

ஆன்லைன் கல்வி ஆபத்தானது
ஆன்லைன் கல்வி மாணவர்களுக்கு இடையே பெரிய பாகுபாட்டை உருவாக்குவதாகவும் நகர்ப்புற மாணவர்கள் எளிதாக ஆன்லனை வகுப்புகளில் பங்கேற்க முடிவதாகவும் அதேநேரம் கிராமப்புற மாணவர்களால் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் வகுப்புகளில் முறையாகப் பங்கேற்க முடிவதில்லை. மேலும், நீண்ட காலமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், இது மாணவர்களை மனதளவில் பெரியளவில் பாதிக்கிறது என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிந்துரை
மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று ஓராண்டுக்கு மேலாகி விட்டது என்றும் இது அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது என்றும் சஹஸ்ரபுத்தே தலைமையிலான நிலைக்குழு தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

ஆந்திரா பள்ளிகள் திறப்பு
அதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பதைக் குறித்து ஒவ்வொரு மாநில அரசுகளும் தொடர்ந்து முடிவெடுத்து வந்தன. அதன்படி ஆந்திராவில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் வழக்கம் போலப் பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பரவலைக் கண்டறிய மாணவர்கள் இடையே, ரேண்டம் டெஸ்ட்களை எடுக்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.

பலருக்கு கொரோனா
அதில் எட்டு மாணவர்கள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் என 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது எங்கு ஆந்திராவில் நடந்துள்ளதைப் போலத் தமிழ்நாட்டிலும் வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் வரும் செப் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. அதைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து செப் 1ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள மேஜைகள், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவர்களை, வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் மாணவர்களிடம் அறிகுறி இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய வேண்டும், ஒரு வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

3ஆம் அலை
அதேநேரம் கடந்த சில நாட்களுக்கு முன் வல்லுநர் குழு மத்திய அரசுக்கு அளித்திருந்த பரிந்துரையிலும், வரும் அக்டோபர் மாதம் நாட்டில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதைத் தடுக்க தேவையான மருத்து உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

கோரிக்கை
பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் ஏற்படும் மன ரீதியான பாதிப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை படிப்படியாகத் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனைப் பலரும் வரவேற்றாலும்கூட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வேக்சின்
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், மத்திய அரசு சைடஸ் கேடிலா வேக்சினுக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த வேக்சின் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தலாம். 3 தவணையாகச் செலுத்த வேண்டி இந்த கொரோனா வேக்சினை முதலில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் செலுத்த வேண்டும் என்றும் இதன் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications