ஆளுநர் காரை பின் தொடர்ந்த 10 வாகனங்களுக்கு விழுந்த அதிரடி தடை! சென்னை ராஜ்பவனில் நடந்தது என்ன
சென்னை: தமிழக கவர்னரின் அதிகாரப்பூர்வ பயணங்களில் உடன் செல்லும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 10-லிருந்து 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த எரிபொருள் சிக்கன வேண்டுகோளை ஏற்று ஆளுநர் எடுத்த இந்த முடிவு, சென்னை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேற்காசியப் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்ட அழுத்தம் இந்த முடிவுக்கு பின்னணியாக அமைந்துள்ளது..
மேற்காசியப் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார்.

எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய பிரதமர், தாமே முன்மாதிரியாக நடந்து தன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் இடம்பெறும் கார்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார்.. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் ஒரு புதிய அலையை உருவாக்கியது.. பிரதமரின் வேண்டுகோள் இந்திய அளவில் கவனத்தையும் பெற்றது.
தமிழக ஆளுநரின் முடிவு
இதைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் தங்களுக்கான வாகன அணிவகுப்பில் இடம்பெறும் வாகனங்களை கணிசமாக குறைத்து கொண்டு வருகிறார்கள்.. மத்திய அமைச்சர்களும் இதே வழியில் அதிரடிகளை துவங்கி உள்ளனர்.. இந்த வரிசையில் தற்போது தமிழகமும் இணைந்துள்ளது.
ஆம், பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன வேண்டுகோளை முழுமையாக ஏற்றுக்கொண்ட தமிழக ஆளுநர், சென்னை ராஜ்பவனில் இருந்து மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ பயணங்களின்போது உடன் செல்லும் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைக்க உத்தரவிட்டார்.. இதுவரை 10 வாகனங்கள் வரை உடன் செல்லும் நிலை இருந்தது, தற்போது அது 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது..
அரசியல் வட்டாரத்தில் எதிரொலி
இந்த முடிவு சென்னை அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் கவனிப்பை ஈர்த்துள்ளது.. நாட்டின் உயரிய அரசமைப்பு பதவிகளில் இருப்பவர்களே எரிபொருள் சிக்கனத்தில் முன்மாதிரியாக மாறும்போது, மற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொதுப் பிரமுகர்களிடையேயும் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநரின் இந்த நடவடிக்கை வெறும் சிக்கன நடவடிக்கை மட்டுமல்ல, அரசமைப்பு பதவிகளில் உள்ளவர்களின் பொதுப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது..
இந்தியாவும் எரிபொருள் சார்பும்
இந்தியா தன் கச்சா எண்ணெய் தேவையில் கணிசமான பகுதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.. மேற்காசியப் பிராந்தியத்தில் போர் சூழல் தொடரும்போது, இறக்குமதி விலை அழுத்தம் நேரடியாக பெட்ரோல், டீசல் விலைகளில் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது.
அதனால் தேசிய அளவில் எரிபொருள் நுகர்வைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிக்கு இப்போது பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.. பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது போன்ற சிறிய மாற்றங்கள் கூட தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..
உயர் பதவியில் உள்ளவர்கள் வாகன எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது ஒரு முக்கியமான தொடக்கம் என்றாலும், சாமான்ய மக்களும் இந்தச் சிக்கன உணர்வை தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முன் வருவார்களா என்பதான் இப்போதைய உண்மையான கேள்வி..!!!












Click it and Unblock the Notifications