₹100 நிலம் ₹500-ஆ? வழிகாட்டி மதிப்பில் வரலாற்று தவறு.. 5 மாவட்டங்களில் பதிவு நின்றது, தீர்வு என்ன?
சென்னை: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்புகள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை சரிசெய்வது குறித்த விவாதங்கள் மறுபடியும் எழுந்துள்ளன. குறிப்பாக சில மாவட்டங்களில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதாக புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது குறித்த தற்போதைய நிலைப்பாட்டை பதிவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் சொத்துப் பரிமாற்றங்களின் போது, அந்தந்த பகுதிக்கான அரசின் வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன.

தமிழக அரசின் வழிகாட்டி மதிப்பு
பொதுவாக சந்தை நிலவரத்திற்கு இணையாக இந்த வழிகாட்டி மதிப்புகள் இருக்க வேண்டும் என்பதே விதியாகும். ஆனால், நடைமுறையில் சில பகுதிகளில் இந்த இரண்டிற்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக நில உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் வழிகாட்டி மதிப்புகளில் நிலவிய குளறுபடிகளைக் களைந்து, அதனை முறைப்படுத்துவதற்காக 2023ஆண்டில் தமிழக அரசு ஒரு விரிவான சீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் நில வழிகாட்டி மதிப்புகள் சராசரியாக 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.
அதுவும் சென்னை, கோவை போன்ற வளர்ந்து வரும் நகரப் பகுதிகளில் நிலத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால், இந்த உயர்வு அங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நகர்ப்புற மேம்பாட்டிற்கு இணையான ஒரு உயர்வாகவே இது பார்க்கப்பட்டது.
சதுர அடி 100 ரூபாய்
இருந்தாலும் தமிழகத்தின் சில ஊரகப் பகுதிகளில் நிலவரம் மாறுபட்டுள்ளதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களின் உட்புறக் கிராமங்களில், நிலத்தின் உண்மையான சந்தை விலை குறைவாக உள்ள நிலையில், அரசின் வழிகாட்டி மதிப்பு கூடுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
உதாரணமாக, ஒரு சதுர அடி நிலம் சந்தையில் 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகும் இடங்களில், வழிகாட்டி மதிப்பானது 250 முதல் 500 ரூபாய் வரை இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தகைய முரண்பாடுகள் நில விற்பனையைப் பாதிக்கக்கூடும் என்பதால், அந்தந்தப் பகுதி மக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இவற்றைச் சீரமைக்கக் கோரி மனுக்களை அளித்து வருகின்றனர்.
அதிகாரிகள் விளக்கம் என்ன?
இந்த கோரிக்கைகள் குறித்துப் பதிவுத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு சீரமைப்பின் போதே இதற்காகப் பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
அந்த சமயத்தில் பெறப்பட்ட முறையீடுகளின் அடிப்படையில் பல இடங்களில் மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், இப்போது நடைமுறையில் உள்ள மதிப்புகளில் உடனடி மாற்றங்களைச் செய்வது நிர்வாக ரீதியாகச் சவாலானது என்றும் கூறப்படுகிறது. மீண்டும் ஒருமுறை மாநிலம் தழுவிய சீரமைப்பு நடைபெறும்போது மட்டுமே இத்தகைய கோரிக்கைகளை டெக்னில் ரீதியாக பரிசீலிக்க முடியும் என்பது அதிகாரிகளின் விளக்கமாக உள்ளதாம்.
வழிகாட்டி மதிப்பு
எப்படியிருந்தாலும், எந்தவொரு நில மதிப்பீட்டு முறையிலும் 100 சதவீத துல்லியத்தை எட்டுவது என்பது சவாலான காரியமே.. ஒருபுறம் அரசின் வருவாயை பாதுகாக்கவும், நில மதிப்பை முறைப்படுத்தவும் வழிகாட்டி மதிப்புகள் அவசியமாகின்றன. இன்னொருபுறம் கள நிலவரத்தில் உள்ள சிறிய முரண்பாடுகள் சாமானிய மக்களைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதும் அவசியமாகும்.
புகார்கள் மற்றும் அதிகாரிகளின் விளக்கம் என இரண்டு தரப்பிலும் நியாயங்கள் இருக்கும் சூழலில், வரும் காலங்களில் தொழில்நுட்ப உதவிகளுடன் சந்தை நிலவரத்தை அவ்வப்போது கண்காணித்து வழிகாட்டி மதிப்புகளை உடனுக்குடன் இணக்கமாக மாற்றுவது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும். இது நில உரிமையாளர்களுக்கும் சுமையைக் குறைக்க உதவும், அரசின் வருவாயையும் சமநிலைப்படுத்தும்..!!












Click it and Unblock the Notifications