பெரிய சம்பவம்.. ஜெ.பிறந்த நாளில் 1000 முதல்வர் மருந்தகங்களை துவக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்.. செம
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்த மருந்தகங்களை திறந்து வைத்துள்ளார்.. இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

விண்ணப்பங்கள் பரிசீலனை
அதன்படி, தமிழகம் முழுவதும் B.பார்ம், D.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர்..
அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் மருந்தகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்கள் திறக்க முடிவாகியிருக்கின்றன.
அரசு மானியம் வழங்குகிறது
குறிப்பாக சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும், மீதம் அனைத்தும் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுகிறது.
இந்த 1000 மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.. இன்று காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் இந்த மருந்தகங்களை தொடங்கி வைத்திருக்கிறார்.. முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையை பார்வையிட்டதுடன், பொதுமக்களிடம் மருந்தகம் குறித்தும் பேசினார்..
75 சதவீதம் குறைந்த விலை மருந்து
முன்னதாக, கூட்டுறவுத்துறை வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருந்து செலவுகளை குறைக்கும் வகையில் தரமான மருந்துகள் குறைவான விலையில் முதல்வர் மருந்தகங்களில் விற்கப்படும். இங்கு அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 75 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ எழிலன், "முதல்வர் மருந்தகம் திறப்பதற்கு 3 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுகின்றன.. மருந்துகளை ஆய்வு செய்து தரமான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படும். இங்கு 75 சதவீதம் அளவுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்.
ஜெயலலிதா - மருந்தகம் திறப்பு
உதாரணத்திற்கு தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும். தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய தற்போது ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கப்படுகிறது.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எந்த ஆட்சியில் கொண்டுவந்தாலும் அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒரு திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளில் முதல்வர் மருந்தகம் திறப்பதில் தவறு ஏதும் இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications