இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.. தமிழ்நாடு முழுவதும் 9.09 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ளது. மொத்தமாக 4,219 மையங்களில் 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வுகள், ஏப்ரல் 6ஆம் தேதியோடு நிறைவடைகிறது. முதல் நாளான ஒன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 9 ஆயிரத்து 2 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 12,467 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவர்கள் எழுதுகின்றனர்.

அதில் 25,801 தனித்தேர்வர்கள், 395 சிறை கைதிகளும் அடங்குவர். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள், சிந்தனைத் திறன் குறைபாடு உடையவர்கள் என 12,292 பேர் ஸ்கிரைட் உதவியுடன் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணிகளில் 49.542 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். அதேபோல் முறைகேடுகளை தடுக்க 4,954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது.
இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் பொதுத்தேர்வு தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள். பொதுமக்கள் ஆகியோர் தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துகள், சந்தேகங்கள் குறித்து அனைத்து தேர்வு நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் புகார் அளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications