தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை! பின்னணி என்ன?
சென்னை: தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில கல்விக்கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேசியதாக தகவல் கசிந்துள்ளது.
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக் கேட்பு
தமிழகத்தில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆலோசனைக் கூட்டம், கருத்துக்கேட்பு கூட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, உயர் அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

என்னென்ன சிக்கல்கள்?
அதில் பள்ளிக்கல்வித்துறையில் கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்கள் இருந்தும், தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டியுள்ளதாகவும் ஆசிரியர் பணியிடங்களில் ஆண்டுதோறும் காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாத நிலை இருப்பதாகவும் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

தற்காலிக ஆசிரியர்கள்
தற்காலிக ஆசிரியர் நியமன விவகாரத்திலும் நிதி பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது போன்ற பல காரணங்களால் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் இருப்பதால், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பேசப்பட்டிருக்கிறது.

முக்கிய முடிவு
11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால் அந்த தேர்வை ரத்து செய்வது பற்றி விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications