தமிழகத்தில் 12,915 தபால் ஓட்டுகள் ரிஜெக்டட்.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் போது 12,915 தபால் ஓட்டுகளை நிராகரித்து விட்டதாக, தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் சுமாா் ஒரு லட்சம் பேர், தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தவில்லை என்ற தகவல் சிலநாட்களுக்கு முன் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் ஓட்டுகளை செலுத்த முடியாத வகையில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, ஜாக்டோ ஜியோ சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில் தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களைஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தமிழகத்தில் மொத்தம் 4,35,003 தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் 4,10,200 தபால்ஓட்டுகள் பதிவாகியுள்ளது. மேலும் பதிவான தபால் வாக்குகளில் 3, 97,291 தபால் வாக்குகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
ஒரே மர்மமா இருக்குதே.. மீண்டும் சர்ச்சையில் தேனி.. திபுதிபுவென வந்து இறங்கிய விவிபேட் இயந்திரங்கள்
ஆனால் 12,915 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படிவங்களை முறையாக நிரப்பாதது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி இல்லாதது போன்ற பல்வேறு குறைபாடு காரணங்களுக்காக 12,915 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், தபால் ஓட்டுகள் குறித்த தகவல்கள் அனைத்தையும் 2 நாட்களுக்குள் இணையதளங்களில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் தபால் ஓட்டுகள் தொடர்பான குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க இப்பணியை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முறையான பயிற்சியும், விளக்கமும் இல்லாத காரணத்தால் தான், அதிக அளவிலான தபால் ஓட்டுகள் நிராகரிக்கும் நிலை வந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.