ஓபிஎஸ் பக்கம் சாய்வோர் எண்ணிக்கை கூடுதே.. மாஜி எம்எல்ஏக்கள் உட்பட 12 பேரை நீக்கிய எடப்பாடி!
சென்னை: முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் உட்பட 12 அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல் காரணமாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தொண்டர்களின் பலம் யாருக்கு என்பதில் இரு தரப்பும் தொடர்ந்து மோதி வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி , தொண்டர்களின் பலமும், நிர்வாகிகளின் பலமும் தனக்கு இருக்கிறது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

அணி மாறும் நிர்வாகிகள்
ஆனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் ஆங்காங்கே தொண்டர்களை சந்தித்தாலும், பெரியளவில் பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யப்படவில்லை. சட்டரீதியிலான போராட்டங்களையே ஓபிஎஸ் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இருந்தும் சில முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மைத்ரேயன் நீக்கம்
அண்மையில் சென்னை எழும்பூரில் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மைத்ரேயன், ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்பி மைத்ரேயனை நீக்குவதாக இபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் கட்சியின் இரு முன்னாள் எம்எல்ஏ-க்கள் உட்பட 12 பேரை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இபிஎஸ் அறிக்கை
இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிகோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெங்கடாச்சலம், கோவிந்தராஜ் ஆகியோர் நீக்கப்படுகின்றனர்.

முன்னாள் எம்எல்ஏ-க்கள் நீக்கம்
அதேபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயபார்த்திபன், கண்ணகி குப்புசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சீஜிராஜ், கருப்பூர் கா.ராஜகோபால், துறையூர் கணேஷ் பாண்டியன், வினோபாஜி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருவது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications