பிளஸ் 2 பொதுத்தேர்வு.. 12000 மாணவ மாணவிகள் ஆப்சென்ட்.. காரணம் என்ன?
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாடத்தை 12000 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் தேர்வினை 12,364 மாணவ மாணவிகளும், ஆங்கிலத் தேர்வை 12,696 மாணவர்களும் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7534 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 7, 22, 200 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

அதில், 3, 58,201 மாணவர்கள், 4,13,099 மாணவிகள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர். இதனைத் தவிர தனித்தேர்வர்கள் 21875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களைப் பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின் சாதனங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பாடத்தேர்வான மார்ச் 1ஆம் தேதியன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று 12ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்வை மாநிலம் முழுவதும் 12,696 மாணவர்கள் எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு எளிமையாக இருந்ததாகவும் ஒரு சிலருக்குக் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் மாணவர்கள் பயம் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுதாமல் தவிர்த்துள்ளனர்.
மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பயம், பதற்றம் காரணமாக 50000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications