“விருப்பமில்லை என 12 ஆயிரம் பேர் SIR படிவத்தை திருப்பி அளிக்கவில்லை” - அர்ச்சனா பட்நாயக் தகவல்
சென்னை: விருப்பமில்லை என 12 ஆயிரம் வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவத்தை திருப்பி அளிக்கவில்லை என தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை படிவங்கள் பூர்த்தி செய்து திருப்பி பெறப்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று மாவட்டம் தோறும் தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மாவட்டம்தோறும் தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியலை வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குவதற்கு முன் அக்டோபர் 27 அன்று இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 6,41,14,587.
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755. அதில் பெண் வாக்காளர்கள் 2,77,06,332; ஆண் வாக்காளர்கள் 2,66,63,233, மாற்று பாலினத்தவர்கள் 7,191; மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 4,19,355;
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடி நிலை அதிகாரிகள் குறைந்தபட்சம் மூன்று முறை வீடு வீடாகச் சென்று விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட இடம்பெயந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்ட பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தன்படி தமிழ்நாட்டில் இறந்தவர்கள் 26,94,672, இடம்பெயர்ந்தவர்கள் 66,44,881, ஒருமுறைக்கு மேல் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் 3,39,278 என மொத்தம் 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.
இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளில் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியாதவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் படிவங்களைத் திரும்ப வழங்கியவர்களின் பெயர் பட்டியலில் விடுபட வாய்ப்பில்லை. விருப்பமில்லை என 12 ஆயிரம் பேர் எஸ்ஐஆர் படிவத்தை திருப்பி அளிக்கவில்லை.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம் 6 அல்லது படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை அணுகலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையம் நடத்தவுள்ள சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதன் விவரம் இறுதி வாக்காளர் பட்டியலில் தெரியவரும். இன்று வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications