2006ம் ஆண்டு முதல் சென்னை ஐஐடியில் 14 தற்கொலைகள்.. சிபிஐ விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு
Recommended Video
சென்னை: சென்னை ஐஐடியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 14 தற்கொலைகள் நடந்திருப்பதால் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் 2006 முதல் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதால், அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி லோக் தந்திரிக் ஜனதா தள கட்சியின் இளைஞரணி தேசிய தலைவரான கேரளா கோழிக்கோட்டை சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் தமிழக கேரளா காவல்துறையிடம் உரிய விசாரணை கோரி புகார் அளித்துள்ளதையும், சிபிஐ விசாரணை கோரி நவம்பர் 18ல் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த 5 பேர், தெலுங்கானாவை சேர்ந்த 3 பேர், கேரளாவை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், ஆங்கில புலமைபெற்றவர்களாலும் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகளவில் துன்புறுத்தல்களும், கொடுமைகளும் நடந்து வருவதாகும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஐஐடியில் சுமார் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரே பாராளுமன்றத்தில் பேசி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடி காவல் துறையும் விசாரித்தால் இந்த வழக்கின் உண்மை தன்மை வெளியே வராது என்பதால், அந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு வர உள்ளது