15 மாநாடு.. ஒரு நடைப்பயணம்.. வேகம் எடுக்கும் விஜய் அரசியல்? திமுக ஆட்சிக்கு எதிராக புகார் பெட்டி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கு முன்னதாக 2வது மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு நடத்தியதிலிருந்து லைம் லைட்டில் அதிகம் அடிப்படுபவர் யார் தெரியுமா? திருமாவளவன்தான். அதிகாரத்தில் பங்கு என விஜய் சொன்ன விசயம் விசிகவை குறிவைத்துத்தான் எனப் பலரும் பல கோணங்களில் அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர். அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டிய தேவை தங்களுக்கு உருவாகவில்லை என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்த பிறகும் மீண்டும் அவரையே குறிவைத்து புதிய புயல் கிளம்பியது.

அதாவது தனியார் வாரப் பத்திரிகை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியிட உள்ள அம்பேத்கர் நூலை திருமாவளவன் வெளியிடப் போவதாகவும் அதை விஜய் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதைக் கொண்டு மறுபடியும் திருமாவளவன் மற்றும் விஜய் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே விஜய் மாநாடு தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து வந்த சிலர், தீர்மானமே நிறைவேற்றாமல் ஒரு மாநாட்டை சினிமா இசை வெளியீட்டு விழாவைப் போல நடத்தி முடித்திருப்பது அரசியல் அனுபவம் இல்லாததையே காட்டுகிறது என வாதிட்டு வந்தனர். அதற்குப் பதிலடி தரும் விதமாக நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, மாநில பட்டியலுக்குக் கல்வியை மாற்றுதல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு எனப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பலரும் விக்கிரவாண்டி மாநாடு முடிந்ததும் விஜய் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டார் எனக் கூறிவந்த நிலையில் அவர் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து மாநாடு தொடர்பான குறை, நிறைகளை எழுத்துப்பூர்வமாகக் கேட்டுப் பெற்றுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. எனவே விஜய் தனது அரசியல் பணிகளை வேகப்படுத்தி வருகிறார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கின்றன.
இந்நிலையில்தான் அவரது அடுத்த கட்ட மூவ் பற்றிய சில தகவல்கள் கசிந்து வருகின்றன. விக்கிரவாண்டி மாநாடு நடப்பதற்கு முன்னதாகவே பேட்டி ஒன்றில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், விரைவில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்திருந்தார். எப்படி அண்ணாமலை என் மண் என் மக்கள் என்று ஒரு நடைப்பயணம் தொடங்கினாரோ அதே ஸ்டைலில் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி இந்த மாதிரியான பயணத்தைத் திட்டமிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த முதற்கட்ட பயணம் கிட்டத்தட்ட 100 தொகுதிகளை உள்ளடக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தின் போது மக்கள் குறைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? தங்களின் ஆட்சி வந்தால் அதை எப்படி நிறைவேற்றுவோம் என்பதை விஜய் விளக்கிப் பேச இருக்கிறார். மேலும் மக்களின் குறைகளைக் கேட்டு அதை ஸ்டாலின் ஸ்டைலில் ஒரு புகார் பெட்டியில் பெறவும் இருக்கிறார். கிட்டத்தட்ட திமுகவின் கொள்கையை மட்டும் விஜய் காப்பி அடிக்கவில்லை. கடந்த காலங்களில் ஆட்சிக்கு வருவதற்காக ஸ்டாலின் என்ன என்ன அஸ்திரங்களைக் கையில் எடுத்தாரோ அதை எல்லாம் கையில் எடுக்க உள்ளார் விஜய் என்கிறார்கள்.
அதற்கு முன்னதாக இரண்டாம் கட்டமாக இன்னொரு மாநாட்டுக்கும் விஜய் ஒரு திட்டத்தை உருவாக்கி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அது முடிந்த கையோடு 4 மண்டலங்களில் மாநாடுகள் நடத்தவும் தவெக தயாராகி வருகிறது. சரியாகச் சொல்லப் போனால் எதிர்வரும் 6 மாதங்களுக்கு உள்ளாக சுமார் 15 மண்டல மாநாடுகள் நடைபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இவை இல்லாமல் கட்சியில் கொள்கை அறிவிக்கப்பட்டுவிட்டதால், மாவட்டம் தோறும் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரத்தில் ஒரு பொதுக்கூட்டம் கட்டாயம் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் வரிசையில் தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் எதை எல்லாம் நிறைவேற்றவில்லை என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதை நிறைவேற்றத் தவறிய அரசைக் கண்டித்து ஒரு மாபெரும் போராட்டம் நடத்தவும் விஜய் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications