சென்னை கோயம்பேடு சந்தையில்.. வடமாநில குழந்தை தொழிலாளர்கள்! 16 சிறுவர்களை மீட்பு
சென்னை: கோயம்பேடு சந்தையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தம் 16 சிறார்கள் கோயம்பேட்டிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் காய்கறி, பழம், பூ மற்றும் தானியங்கள் விற்பனை வேலையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் முதலில் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்திற்கு கவுன்சிலிங்கிற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதிகாரிகள் அளித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 16 சிறுவர்களில் 14 பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்.

கோயம்பேடு சந்தையில் சிறுவர்கள் சுமை தூக்கும் மற்றும் பொருட்களைப் பிரிக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் வந்ததைக் கண்டவுடன் பல சிறுவர்கள் ஓடிவிட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அன்று அவர் விடுத்திருந்த அறிக்கையில், "உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம், இன்றைய குழந்தைகளை சார்ந்துள்ளது. அவர்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களை குழந்தை தொழிலாளராக பயன்படுத்துவது சட்டத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஆனால், ஒரு சில குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல், தொழிலாளர்களாக மாறும்போது, அவர்கள் கல்வி, விளையாட்டு, சுதந்திரம் மற்றும் அவற்றால் கிடைக்கக்கூடிய நல்ல எதிர்காலம் ஆகியவற்றை இழக்கின்றனர். ஒரு எதிர்கால சாதனையாளரை இழப்பது என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. எனவே, அத்தகைய சூழலை தடுப்பது மிக அவசியம். கல்வி கற்கும் உரிமையை அனைத்து குழந்தைகளும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்கவும், அனைத்து குழந்தைகளின் கல்வி கற்றலை உறுதி செய்யும் பொருட்டும் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்காக அரசு மாநில செயல் திட்டத்தையும், நிலையான இயக்க நடைமுறைகளையும் உருவாக்கியுள்ளது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், தமிழகத்தில் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தரமான கல்வி கற்கவும், பெற்றோரின் சுமைகளை குறைக்கவும், தமிழக அரசு கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலைச் சிற்றுண்டி மற்றும் சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள் போன்ற பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு பொது மக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்கி, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வுடன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications