நாளை தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்- எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்
சென்னை: 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமைந்த உடன் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்புக்காகவும் சபாநாயகர் தேர்வுக்காகவும் சட்டசபை கூட்டப்பட்டது. இதனையடுத்து முதல் சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
ஆளுநரை நேரில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை என உறுதி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறும். புதிய அரசின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
முதல் நாள் கூட்டம்
ஆங்கிலத்தில் முதலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு அதனை தமிழில் வாசிப்பார். ஆளுநர் உரையுடன் நாளைய சட்டசபை கூட்டம் நிறைவடையும்.
எத்தனை நாட்கள்?
பின்னர் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதித்து முடிவு அறிவிக்கப்படும். நடப்பு சட்டசபை கூட்டத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இந்த சான்றிதழ் கொண்டுவந்தால்தான் எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.