அரசு ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை.. சிக்கிய 17லட்சம் வாகனங்கள்! ஆக்ஷனில் தமிழ்நாடு அரசு -ஐகோர்டில் வாதம்
சென்னை: விதிகளை மீறி தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகள், பெயர்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகள், போலீஸ், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர் என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு டிராபிக் விதிகளை மீறி, போலீசில் தப்பித்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் 'G' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு', 'உயர் நீதிமன்றம்', 'காவல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசு சின்னங்களை ஒட்டிக்கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டு உள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் R.முனியப்பராஜ் ஆஜரானார். தமிழ்நாடு அரசு தரப்பில் இதே விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 17 தனியார் வாகனங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற அரசு முத்திரைகள், பெயர்கள், சின்னங்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தெரிவித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடரும்படி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications