வண்டலூரில் அதிவேகமாக சென்ற பைக் இரும்பு தடுப்பில் மோதியது.. 17 வயது மாணவன் பலி
சென்னை: சென்னை வண்டலூரில் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயது மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூரை சேர்ந்தவர் சரண். இவர் அரசு பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு வயது 17. ஏரிக்கரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக அவர் சென்றுக் கொண்டிருந்ததால் இரு சக்கர வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் பைக் வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கின் முன் பகுதியில் கடுமையாக சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அவராகவே இரும்பு தடுப்பில் மோதி இறந்தாரா, இல்லை வேறு ஏதாவது வாகனம் அவர் மீது மோதியதில் நிலைத்தடுமாறி இரும்பு தடுப்பில் மோதிக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் அதிக சிசி கொண்ட பைக்குகளை எடுத்துக் கொண்டு அதி வேகத்தில் செல்வதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக பல முறை எச்சரித்தும் இது போன்று சிலர் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டுவதால் விபத்தில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழக்கிறார்கள்.
பெற்றோரும் குறிப்பிட்ட வயது வரை பைக்குகளை வாங்கிக் கொடுப்பதையோ அல்லது வேறு பைக்குகளை ஓட்ட பழக்குவதையோ தவிர்த்தல் வேண்டும். எதுவாக இருந்தாலும் 18 வயதுக்கு மேல் கற்றுத் தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications