இன்றே ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. இனி தமிழகத்தில் பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது!
Recommended Video
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்து சற்று அமைதியாக இருந்த தமிழக அரசியல் மீண்டும் ஆவேச போர்க்களமாக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதன் காரணமாக, மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
தீர்ப்பு, தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்தால் அடுத்து என்ன நடக்கும்? பாதகமாக வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்ற சர்ச்சைகள் இப்போதே தமிழக அரசியல் அரங்கில் ஆரம்பித்துவிட்டன. அதுகுறித்த ஒரு பார்வை:
சபாநாயகர் உத்தரவு செல்லுபடியானால்
ஒருவேளை சபாநாயகர் உத்தரவு செல்லுபடியாகும் என்று இந்திரா பானர்ஜி கூறியதையே மூன்றாவது நீதிபதி கூறினால் அதன் பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. 18 பேருமே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிவரும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இருதரப்பும் வாதிட வேண்டி வரும். முதல்வர் தரப்பும் மூன்றாவது நீதிபதியின் முன்பு வைத்ததைப் போலவே உச்சநீதிமன்றத்திலும் வாதம் அமைக்க வேண்டிய தேவை எழும்.
[தகுதி நீக்க எம்எல்ஏக்களை குற்றாலத்தில் தங்க வைக்க முடிவு.. டிடிவி தினகரன் அதிரடி பிளான்! ]
அரசுக்கு ஆபத்தில்லை
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து விட்டு தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் காலதாமதம் ஏற்படும். இதனால் 18 எம்எல்ஏக்களும், அவர்கள் தொகுதி மக்களும் தான் அதிகம் பாதிப்பை சந்திக்க நேரிடும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசுக்கு ஆபத்தில்லை என்ற அளவில் அவர்கள் தரப்பு மகிழ்ச்சி அடையக் கூடும்.
சபாநாயகர் தீர்ப்பு செல்லாது என்றால்
ஒருவேளை சபாநாயகர் தீர்ப்பு செல்லாது என்ற நீதிபதி சுந்தரின் தீர்ப்புதான் சரி என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்தால் அதன்பிறகுதான் தமிழகத்தில் அரசியல் பிரளயமே ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு தீர்ப்பு வரும் பட்சத்தில் தினகரன் தரப்பு மிகப்பெரும் பலம் மிக்கதாக மாறும். அதன்பிறகு தினகரன் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்றேயாக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சபாநாயகர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் 18 பேரும் எம்எல்ஏக்களாகவே தொடருவார்கள் என்பதால் அது தினகரன் தரப்புக்கு ஆதாயம்தான்.
பாஜக பஞ்சாயத்து
தினகரன் தரப்பு கோரிக்கையை என்பது தன்னை முதல்வராக வேண்டும் என்பதில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒருவேளை இப்போது டெல்லியில் இருந்து கசியும் தகவல்கள் உண்மை எனில், முதலமைச்சரை மாற்ற வேண்டாம், உங்கள் தரப்பிலிருந்து இருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று பாஜக தரப்பில் யாரேனும் பஞ்சாயத்து பேசக்கூடும். இதற்கு தினகரன் ஒப்புக்கொண்டுவிட்டார் சலசலப்பு குறையும். ஆனால் தன்னைத் தான் முதல்வராக வேண்டும் என்று பிடிவாதம் காட்டினால், அப்போதுதான் அரசியலில் ஸ்திரமற்ற தன்மை உருவாகும்.
முதல்வர் பதவி
ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை விட்டுத் தரத் தயாரில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அவர் விட்டுக் கொடுத்தாலும் அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுகிறது. எனவே, முதல்வர் பதவிக்கான பேச்சுவார்த்தை என்பதுதான் மிக முக்கியமானதாக பார்க்கப்படும். எடப்பாடி தரப்பு இதற்கு சம்மதிக்காத பட்சத்தில், தினகரன் தரப்பு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆட்சி கலைப்புக்கு முயலக்கூடும். ஆட்சி கலைப்பு என்பது தினகரன் தரப்பின் கடைசி அஸ்திரமாக தான் இருக்கும் என்கிறார்கள். ஏனெனில், ஆட்சிகாலம் இருக்கும்போது அதை ஆண்டு கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று சசிகலா தரப்பு நினைக்கிறது.
பிரேக்கிங் செய்திகள் ஆரம்பம்
இன்று சசிகலாவை தினகரன் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் நேற்று தனது ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் நடந்த ஆலோசனையின்போது, இதுதான் விவாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பொது தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது என்பது குதிரைக்கொம்பு என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளதால், முடிந்த அளவுக்கு இந்த ஆட்சிக்கு ஆட்டம் காட்டதான் முயற்சிப்பார்களே தவிர கலைக்க கிடையாது. தினகரன் தரப்பின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க எதிர்த்தரப்பு முயலும். இதில் பஞ்சாயத்துக்கு டெல்லி தரப்பு வரக்கூடும். இதனால் "அவர்கள் வீட்டில் இப்பொழுது ஆலோசனை", "இன்னொருத்தரு வீட்டில் இன்னொரு ஆலோசனை" என்று பிரேக்கிங் செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. அதன் ஒரு பகுதியாகத்தான் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் இரண்டு நாட்கள்தான் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!