தமிழகத்தில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.. நோயாளிகள் பெரும் அவதி
சென்னை: ஊதிய உயர்வு கோரி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுமார் 18,000 மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் வெளி மற்றும் உள்நோயாளிகள் துறையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், காலவரையறையுடன் பதவி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 18,000 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதால் தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவல் சிகிச்சை பெற முடியாமல் ஏராளமான நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

மருத்துவர்களை அழையுங்கள்
இந்நிலையில் வேலைநிறுத்தம் செய்துள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

ஸ்டாலின் வேண்டுகோள்
மேலும் உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் இது போன்று "வேலை செய்ய மாட்டோம்" என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தள்ளிவிட்டுள்ளார்
சுமார் 18 ஆயிரம் மருத்துவர்களை போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளிவிட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ள ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிர் காக்கும் சிகிச்சை
வேலை நிறுத்தம் செய்துள்ள மருத்துவர்கள் அவசரகால சிகிச்சை தவிர பிற சிகிச்சைகளை மேற்கொள்ள மாட்டோம் என முன்பு அறிவித்து இருந்தனர். அதன்படி அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும், மருத்துவ அறுவை சிகிச்சைகள்மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. புற நோயாளிகள் சிகிக்சைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. உள்நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பேச்சு
இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சென்னையில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.விரைவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications