தமிழக பள்ளி மாணவர்களே.. வந்தாச்சு காலாண்டு விடுமுறை அறிவிப்பு.. எத்தனை நாட்கள் லீவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே மாதியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் பொது காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அப்போது தேர்வுக்கான வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதனை கருத்தில்கொண்டு, தமிழகத்தில் நடப்பாண்டில் பொது காலாண்டுத் தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை நேற்று திடீரென அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. பள்ளி அளவில் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தயாரித்து, தேர்வை நடத்த வேண்டும் என்றும், தேர்வுக்கான தேதிகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காலாண்டு தேர்வுகளை வரும் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் காலாண்டு விடுமுறை தொடர்பாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான காலாண்டு விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 9-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, அக்டோபர் மாதம் 10-ம் தேதி, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதல், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.