தமிழக கோவில்களிலுள்ள தங்க நகைகள் 2,000 கிலோ..சேதமடைந்த நகைகளை உருக்க திட்டம் - அமைச்சர் சேகர் பாபு
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: திருக்கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தங்க நகைகளில் சேதாரம் அடைந்த நகைகளை முறைப்படுத்தி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் சரிபார்த்து, பின்னர் நகைகளை உருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற அறிவுப்புகள் தொடர்பான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகள், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்துதான் இந்தக் கூட்டம் நடைபெற்றதாக கூறினார்.

காணிக்கை நகைகள்
திருக்கோயில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தங்க நகைகளில் சேதாரம் அடைந்த நகைகளை முறைப்படுத்தி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் சரிபார்த்து, பின்னர் நகைகளை உருக்க திட்டமிடப்பட்டது. அதில் பெறப்படுகிற வைப்பு தொகையை அந்தந்த திருக்கோவில்களின் வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
முதலாவதாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் செலுத்தப்பட்ட தங்க நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசின் நிறுவனம் மூலம் உருக்கி, எஸ்பிஐ வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட உள்ளது. 12,000 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு தலா ஒரு லட்சம் வைப்பு நிதியாக தமிழக அரசு வழங்கி இருந்தது. அதிலிருந்து பெறப்பட்ட வட்டி தொகை கோவில்களின் ஒரு கால பூஜைக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்று ஆலோசிக்கப்பட்டது.

அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை
கோவில்களில் உள்ள 9,857 அர்ச்சகர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். தமிழகத்தில் உள்ள மலைக் கோவில்களில் ரோப் கார்கள் பயன்படுத்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு பயிற்சி பள்ளிகள் செயல்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள 6 பயிற்சி பள்ளிகளை இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

ஆக்கிரமிப்பு நிலங்கள்
இதுவரை 1,146 நபர்களிடமிருந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 753 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்று கூறினார். தமிழகத்தில் 4 லட்ச ஏக்கருக்கும் அதிகமாக திருக்கோவில்களில் நிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களை முழுமையாக திரும்பப் பெற பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

2000 கிலோ நகைகள் காணிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் செலுத்தப்பட்ட நகைகள் தற்போது வரை 2,000 கிலோவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகத்தீஸ்வரர் கோவில் நிலங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன் படியே இந்து சமய அறநிலையத் துறையும் நடக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications