சென்னையில் போக்குவரத்து பணிமனையில் விபத்து.. சுவரில் பேருந்து மோதி இருவர் பலி.. ஓட்டுநர் கைது
சென்னை: சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதிய விபத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் பணிமனை ஊழியர்கள் இருவர் பலியாகிவிட்டனர்.
சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனை உள்ளது. இங்குள்ள பேருந்துகளில் நள்ளிரவு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதில் டிரைவர்கள், கன்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என பணியில் மும்முரமாக இருந்தனர்.
அப்போது பாலமுருகன் என்ற ஓட்டுநர் தனது பேருந்தை எடுத்துக் கொண்டு பராமரிப்பு பணிகள் பார்க்கும் இடத்துக்கு ஓட்டி சென்றார். அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பணிமனை சுற்றுச் சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் ஓய்வறையில் படுத்திருந்த பணிமனை ஊழியர்கள் இருவர் பலியாகிவிட்டனர். அவர்கள் பாரதி, சேகர் என தெரியவந்துள்ளது. இருவரும் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்களாக உள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இதையடுத்து பணிமனையிலிருந்து எந்த பேருந்துகளும் இயக்கப்படாததால் பயணிகள் அவதிப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பின்னர் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. இதனிடையே ஓட்டுநர் பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர்.