ஃபேக் ஐடி மிரட்டல்.. எடுத்த சபதம் முடிக்கும் வருண்குமார் ஐபிஎஸ்! வசமாய் சிக்கிய நாம் தமிழர் தம்பிகள்
சென்னை: நாம் தமிழர் கட்சி சீமான் ஒருங்கிணைப்பாளர் சீமான் - திருச்சி எஸ்பி வருண்குமார் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக சித்தரித்ததாக அவர் அளித்த புகாரின் பேரில் மேலும் இரு நாம் தமிழர் கட்சியினரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி எஸ்பி நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியினை பழிவாங்குவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் கூறியிருந்தார்.

மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து தொடர்ந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதால் எக்ஸ் தளத்திலிருந்து தானும் தனது மனைவியும் விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். மேலும் தன்னையும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினர் என அனைவரையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சுமார் 50 பேரின் பட்டியலை பகிர்ந்த அவர் இது தொடர்பாக யாரையும் விடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளத்தில் பேசும் இணையதள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் வருண்குமாரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே தன் மீது 130க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 வழக்குகளாக மாற்ற வேண்டாம்.. எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் தான் அதை குப்பை தொட்டியில் தான் வீசுவேன் என தெரிவித்திருந்தார்.
மேலும் திமுகவின் ஐடி விங் நிர்வாகி போல வருண்குமார் செயல்படுவதாகவும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னுடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என சவால் விடுத்தார். அதற்கு பதில் அளித்துள்ள வருண்குமார் ஐபிஎஸ்,"திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ தனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. தான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா? " என கேட்டிருந்தார். இப்படியாக இருவரிடையே மோதல் தொடர்ந்து வலுத்து வருகின்றது.
இந்த நிலையில் வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி குடும்பத்தினர் குறித்து சமூக வலை தளத்தில் ஆபாசமாக பதிவிட்ட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவர் என்பவர் அவரை அறிவுறை கூறி வருண்குமார் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் வருண்குமார் அளித்த புகாரின் பேரில் மேலும் இருவரை, போலீசார் கைது செய்தனர். மதுரை விஸ்வநாதபுரம் தபால் தந்தி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் , கள்ளக்குறிச்சி களமருதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் ஆகியோரை இன்று தில்லைநகர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைதான நபர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications