வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படம்..2 தயாரிப்பாளர்களுக்கு வந்த பிரச்சனை! KCA ரிலீசுக்கு ஐகோர்ட் தடை
சென்னை: வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 திரைப்படம் காரணமாக வேறு 2 தயாரிப்பாளர்கள் பிரச்சனையில் சிக்கி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள். என்ன பிரச்சனை? விரிவாக பார்ப்போம்.
நடிகர் நிதின் சத்யாவின் தயாரிப்பு நிறுவனமான ஷ்வேத் நிறுவனம் சார்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தை தயாரிக்க, சினிமா பைனான்சியர் ராம் பிரசாத்திடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. இது சம்பந்தமாக 2021 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதில் பெற்ற 30 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்திய ஷ்வேத் நிறுவனம், மீதமுள்ள 70 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும், பட பணிகளையும் தொடங்கவில்லை என்றும், பைனான்ஷியர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையில், இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் விஜயின் பட வேலைகளுக்கு ஆயத்தமானார்.
இதனால் ராம் பிரசாத், கடனை திருப்பிக் கேட்ட போது, ஷ்வேத் நிறுவனத்தின் கடனை ஏற்றுக் கொள்வதாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முத்தரப்பு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற படத்தை வெளியிடும் முன் கடன் பாக்கி திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடன் பாக்கியை திருப்பித் தராத நிலையில், காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படம் வெளியிடுவது குறித்த அறிவிப்பை லிப்ரா நிறுவனம் வெளியிட்டது. இதையடுத்து, அந்த படத்துக்கு தடை கோரி ராம் பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்த போது மனுதாரர் ராம் பிரசாத் தரப்பில் வழக்கறிஞர் ஸ்வர்ணம் ஜெ. ராஜபோபாலன் ஆஜராகி, படத்தை வெளியிடுவதற்கு முன்பாக கடனை அடைப்பதாக கூறிய உத்தரவாத்ததை மீறியதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.
பின்னர் நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், 70 லட்சம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகே காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், ராம் பிரசாத் மனுவுக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க ஷ்வேத் மற்றும் லிப்ரா நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications