மழைக்கு ஒதுங்கிய மாணவர்கள்.. இப்படியா சாவு வரும்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்.. தாம்பரத்தில் ஷாக்
சென்னை: சென்னையில் நேற்று மாலை கனமழை பெய்தது. தாம்பரம் சேலையூர் போலீஸ் நிலையம் எதிரே மழைக்காக இளைஞர்கள் சிலர் மாடி வீடு அருகே ஒதுங்கினர். அப்போது திடீரென மழையால் மாடி படிக்கட்டு இடிந்து விழுந்தது. இதில் 2 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியை சேர்ந்த 23 வயதாகும் தவமணி, சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயதாகும் திமோ மில்கி (19), பூந்தமல்லியைச் சேர்ந்த 19 வயதாகும் அஸ்வின் , சிட்லபாக்கத்தைச் சேர்ந்த 19 வயதாகும் சாய் கவுசிகன் ஆகிய4 பேரும் சென்னை தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தார்கள்.

நேற்று மாலை கல்லூரி முடிந்தது. மாணவர்கள் 6 பேர் 3 இருசக்கர வாகனங்களில் புறப்பட்டனர். சேலையூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவில் சென்றார்கள்.
அப்போது நல்ல மழை பெய்ய தொடங்கியது. திடீரென கன பெய்த மழை பெய்ததன் காரணமாக அங்கிருந்த பழைய கட்டிடத்தின் மாடி படிக்கட்டுக்கு கீழே சென்று மழைக்காக ஒதுங்கி நின்றார்கள். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த மாடி படிக்கட்டு இடிந்து பயங்கரவேகத்தில் விழுந்தது. மழைக்காக ஒதுங்கி நின்ற கல்லூரி மாணவர்கள் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி, அஸ்வின், சாய் கவுசிகன் ஆகிய 4 பேரும் கட்டிட இடிபாடில் சிக்கி கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 2 மாணவர்களும் ஓடிச்சென்று அங்கிருந்த பொதுமக்கள், தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஓடி வந்தனர். உடனடியாக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் மிகவேமாக கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரும் வெளியே மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் மாணவர்கள் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அஸ்வின், சாய் கவுசிகன் ஆகியோர் படுகாயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பலியான 2 பேரின் உடல்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கே பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இப்படியுமான உங்களுக்கு சாவு வரும் என்று அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.












Click it and Unblock the Notifications