ஆவடி அருகே சோகம்.. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இரு ஒப்பந்த தொழிலாளர்கள் பலி.. ஓனர் மீது வழக்கு
சென்னை: சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் உரிமையாளர், மேற்பார்வையாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கினார்கள். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் (45), தேவன் (55) ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அவர்களின் உடலை மீட்டனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்பத், மேற்பார்வையாளர் மனோ ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்களின் இறப்பு குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் பயன்படுத்தப்படுவதும் அதில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications