பொத்தேரி ரூம்களில் கொட்டிக் கிடத்த கஞ்சா.. 20 கல்லூரி மாணவர்கள் கைது.. 60 பைக், கார்களும் பறிமுதல்!
சென்னை: பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் போலீசார் இன்று காலையில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த மாணவர்கள் பிடிபட்டனர். கஞ்சா வைத்திருந்த 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்து 60 இருசக்கர வாகனங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை புறநகரில் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் சுமார் 1000 போலீசார் இன்று காலை திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம், செங்கல்பட்டு இன்று காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில், பாங், ஹூக்கா மெஷின், ஹூக்கா பவுடர், ஊசிகள், மாத்திரைகள், போதை பெர்ஃபியூம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக சுமார் 30 மாணவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஒரு மாணவி உட்பட 30 மாணவர்களை போலீசார் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் யாரிடம் போதைப் பொருட்கள் வாங்கினார்கள் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார்? மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எப்படி கிடைக்கிறது? போதைப் பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொத்தேரி பகுதி தனியார் விடுதிகளில் கஞ்சா வைத்திருந்த 20 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்து 60 இருசக்கர வாகனங்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்களை மறைமலைநகர் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications