2000 ரூபாய் நோட்டு கொடுத்து பஸ்ல டிக்கெட் எடுக்கப்போறீங்களா? இதை படிச்சிட்டு போங்க
சென்னை: அரசு பேருந்துகளில் நாளை முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் பொதுமக்கள் டிக்கெட் எடுக்க 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் வாங்க வேண்டாம் எனவும் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தாண்டி காலம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.

ஒருவேளை காலம் நீட்டிக்கப்படாவிட்டால் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் போகும் அபாயம் ஏற்படலாம் என்பதால் விரைவில் பணத்தை மாற்றிக் கொள்ளவும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பலரும் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றி வந்தனர்.
உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை மாற்ற வங்கிகளுக்கு செல்ல வேண்டாம், இதற்கு மாறாக அமேசான் உங்களுடைய வீட்டுக்கு நேரடியாக வந்து சேவை அளிக்கிறது. இதற்காக அமேசான்.காம் Amazon Pay Cash Load System என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவையின் கீழ் ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 50000 ரூபாய் தொகையை உங்கள் வீட்டுக்கே வந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு, அதற்கு இணையான தொகையை அமேசான் பே கணக்கில் பேலென்ஸ் சேர்த்துவிடும்.
இந்த அமேசான் பே பேலென்ஸ் தொகையை மக்கள் தங்களுடைய ஆன்லைன ஷாப்பிங், கடைகளில் ஸ்கேன் அண்ட் பே, பிற ஆன்லைன் பேமெண்ட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அமேசான் பே கணக்கில் இருக்கும் பேலென்ஸ் தொகையை வங்கி கணக்கிற்கு கூட மாற்றலாம் அல்லது நண்பர்கள் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய முடியும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. செப்டம்பர் 19, 2023 முதல், அமேசான் மூலம் வழங்கப்படும் ஆர்டர்களுக்கான கேஷ் ஆன் டெலிவரி (COD) பேமெண்ட்டுகளுக்கு ரூ.2,000 கரன்சி நோட்டுகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அமேசான். பணத்தை மாற்ற நினைத்தவர்களுக்கு இதுவே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றி பலரும் டிக்கெட் பெற்று வந்தனர். ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு, இன்னும் 4 நாட்களில் முடிகிறது. இந்த வாரத்தில் இன்றும் 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும். 28ஆம் தேதி மிலாது நபிக்காக, விடுமுறை வருகிறது. எனவே தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் நடத்துனர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது.
நாளை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு பிறகு பொதுமக்கள் பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் இதுவரை 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற 4 நாட்கள் மட்டுமே காலக்கெடு உள்ளது. அதில் ஒருநாள் மிலாடி நபி விடுமுறை வந்து விடும். 29, 30ஆம் தேதிகளில் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும். எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications