“20 ஆயிரம் பேர் தூங்கிக் கொண்டிருந்தனர்.. எடப்பாடி பேசும்போது ஒருத்தரும் கை தட்டல” - செங்கோட்டையன்
சென்னை: மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ பொதுக்கூட்டத்தை தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். "ஆயிரம் ரூபாய் வாங்கிய பின்புதான் கூட்டம். கூட்டத்தில் கரவொலி கிடையாது. அதில் 20 ஆயிரம் பேர் தூங்கிக் கொண்டிருக்கின்றனர், திமுகவை தகர்த்தெறிவோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஒருவரும் கைதட்டவில்லை." என செங்கோட்டையன் பேசியுள்ளார்.
திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாற்று கட்சிகளில் இருந்து விலகி சுமார் 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் பிரச்சர மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வருங்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும். கேட்காமலே கொடுக்கக் கூடியவரே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர். திமுக எங்கே இருக்கிறது என்றால் அதிமுகவில்தான் இருக்கிறது. அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். அதிமுகவினர் திமுகவில் இன்று ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கிறார்கள்.
எவ வேலு அதிமுக, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அதிமுக, முத்துசாமி அதிமுக, சேகர்பாபு அதிமுக, ரகுபதி அதிமுக. திமுகவில் சரியான தலைமை இல்லை என்பதற்குத்தான் இது எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதைத்தான் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டம் நடைபெற்றது. ஆயிரம் ரூபாய் வாங்கிய பின்புதான் கூட்டம். கூட்டத்தில் பரவசம் கிடையாது. கரவொலி கிடையாது. அதில் 20 ஆயிரம் பேர் தூங்கிக் கொண்டிருக்கின்றனர், வேண்டுமென்றால் அந்த காட்சிகளை மறுபடியும் பாருங்கள். ஆட்சி மாற்றம் உருவாகும், திமுகவை தகர்த்தெறிவோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஒருவரும் கைதட்டவில்லை.
இங்கு நீங்களே செலவு செய்து வந்திருக்கிறீர்கள். தவெக தலைவர் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். திரைப்படத்திலேயே அவர் ஹீரோ, எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில் ஹீரோவாக அவர்தான் வரப்போகிறார். அனைத்து கட்சியில் உள்ள குடும்பங்களில் நான்கு ஓட்டுகள் இருக்கும்பட்சத்தில், அதில் இரண்டு ஓட்டுகள் தவெகவிற்கு உள்ளது.
துபாய் அலுவலரிடம் நான் பேசினேன். பல நாடுகளில் இருப்பவர்கள் எப்போது தேர்தல் வரும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 3 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து, விஜய்க்கு வாக்கு அளிப்பதற்காக எந்த தேதி என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாக்கு அளிப்பதற்காக ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்து வாக்களிக்க வருகிறார்கள் என்றால் இந்த தலைவர் விதிவிலக்கு ஆவார், இனி இந்தியாவில் எவருக்கும் இது வராது.
காலங்கள் மாறிக் கொண்டிருக்கிறது, ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. நல்லாட்சி தமிழகத்தில் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இளைஞர்கள் 2 லட்சம் பேர் பதவிகளில் வலம் வரப்போகிறீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாம் யாரை விரல் காட்டுகிறோமோ அந்த இரண்டு லட்சம் பேர்தான் தமிழகத்தில் உலாவ முடியும்." என செங்கோட்டையன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications