2022 Returns: அதிமுகவில் மீண்டும் ஒரு 'நீக்கப் படலம்'.. எடப்பாடி முடிவால் எதிர்காலமே கேள்விக்குறி!
சென்னை: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து கட்சி மீண்டும் உடைந்துள்ளது. 2022ல் ஓபிஎஸ் தரப்பினர் கூண்டோடு நீக்கப்பட்டதைப் போலவே, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பதவி நீக்கம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக அரசியல் வரலாற்றில் 'பதவி நீக்கம்' என்பது புதிதல்ல. ஆனால், 2022-ல் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதற்கும், தற்போது சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, உள்ளிட்ட 25 முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கும் இடையே பல ஒற்றுமைகளும், அதீத அரசியல் மாற்றங்களும் உள்ளன. இதனை "2022 Returns" என்று அரசியல் விமர்சகர்கள் வர்ணிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒற்றைத் தலைமை vs புதிய கூட்டணி அரசியல்
2022 பின்னணி: அப்போது அதிமுகவில் எழுந்த அதிகாரப் போட்டி "யார் தலைவர்?" என்பதாக இருந்தது. ராஜ்யசபா தேர்தலில் 2ல் ஒரு சீட்டை தனது ஆதரவாளருக்கு பெற்றுத் தர ஓபிஎஸ் முயன்றதால், தலைமைப் பதவியில் இருந்து அவரை தூக்கிவிட்டு பொதுச் செயலாளர் ஆக முடிவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்து, பொதுக்குழு மூலம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். அது முழுக்க முழுக்க உட்கட்சி மோதல்.
2026 பின்னணி: தற்போதைய நீக்கம் வெளியிலிருந்து வந்த அழுத்தத்தால் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் முக்கிய தூண்களாக கருதப்பட்ட எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்பட்டதே இந்த அதிரடி நீக்கத்திற்கு காரணம்.
அதிகார மையங்களின் சரிவு
2022-ல் எடப்பாடி பழனிசாமிக்கு வலது மற்றும் இடது கரங்களாக நின்று ஓபிஎஸ்ஸை வெளியேற்ற வியூகம் அமைத்தவர்களே இந்த எஸ்.பி வேலுமணியும், சி.வி. சண்முகமும் தான். இன்று அதே நபர்கள் மீது எடப்பாடி பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது காலத்தின் விசித்திரம்.
2022 (ஜூலை 11 பொதுக்குழு) vs 2026 (மே 13 நம்பிக்கை வாக்கெடுப்பு)
2022: இபிஎஸ் vs ஓபிஎஸ்
2026: இபிஎஸ் vs தவெக ஆதரவு அணி
2022ல் நீக்கப்பட்டவர்கள்: ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர்
2026ல் நீக்கப்பட்டவர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 25 பேர்
2022 நீக்கத்துக்கான காரணம்: உட்கட்சி அதிகார மோதல்
2026 நீக்கத்துக்கான காரணம்: தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது, செயல்பட்டது
2022 நீக்கத்தின் விளைவு: கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைக்கு வந்தது
2026 நீக்கத்தின் தாக்கம்: அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. கூடுதலான எம்.எல்.ஏக்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணி வசம் உள்ளனர்.
2022-ல் ஓபிஎஸ் நீக்கப்பட்ட போது அவர் 'தர்மயுத்தம்' நடத்தினார். 2026-ல் இந்த 25 பேர் 'மாற்று அரசியல்' என்ற பெயரில் தவெகவுடன் கைகோர்த்திருப்பது அதிமுகவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்.
2022-க்கும் 2026-க்கும் வேறுபாடு
2022-ல் இபிஎஸ் பக்கம் பெரும்பான்மை நிர்வாகிகள் இருந்தனர். ஆனால், 2026-ன் இந்த நீக்கம் இபிஎஸ்ஸை ஒரு இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவரான வேலுமணியும், வட தமிழகத்தின் முகமான சி.வி. சண்முகமும் நீக்கப்பட்டிருப்பது அதிமுகவின் கோட்டைகளில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
2022-ல் கட்சி விதிகளின்படி ஓபிஎஸ்ஸை நீக்கி தனது பிடியை உறுதிப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், 2026-ல் கட்சியின் 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் (பாதிக்கும் மேல்) தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது, அதிமுகவை ஒரு மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 2022-ல் கட்சி தப்பித்தது, ஆனால் 2026-ல் இந்த பிளவு அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.












Click it and Unblock the Notifications