2024 நாடாளுமன்றத் தேர்தல்! இந்தியாவை காப்பாற்ற தயாராக இருங்க! திமுகவினருக்கு ஸ்டாலின் மெசேஜ்!
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தியாவை காப்பாற்ற தயாராக இருக்குமாறு திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் நல்ல சேதுபதி இல்ல மண விழாவை நடத்தி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பான ஸ்டாலின் உரை வருமாறு;
''2024 ல் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் வெற்றி பெற்றால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். திராவிட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் என்றைக்கும் துணைநிற்க வேண்டும்.
அதே நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் இப்போது தயாராக இருக்க வேண்டும். அதற்கு உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2024-ஆம் ஆண்டு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நம்முடைய அணிக்கு நீங்கள் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நில்லுங்கள்... துணை நில்லுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நான் மணமக்களை அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்ற வேண்டுகோளை மட்டுமே.''












Click it and Unblock the Notifications