சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு.. கவுண்டர் அரசியலை கையில் எடுத்து.. திமுகவிற்கு செக் வைத்த பாஜக.. ட்விஸ்ட்
சென்னை: குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அதிரடியாக களமிறங்கி உள்ளது. என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார். பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசித் தேதியாகும். தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக ஜூலை 21 அன்று பதவி விலகியதால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான நாடாளுமன்ற வாரியத்தால் எடுக்கப்பட்டது.
களமிறக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள், பிரதமர் மோடியையும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் வேட்பாளரைத் தேர்வு செய்ய அதிகாரம் அளித்திருந்தனர். இந்தத் தீர்மானத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் சிங் முன்மொழிய, தெலுங்கு தேசக் கட்சியின் ராம் மோகன் நாயுடு வழிமொழிந்திருந்தார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், 68 வயதான ராதாகிருஷ்ணனை வேட்பாளராகத் தேர்வு செய்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே எடுக்கப்பட்டது என்றார். மேலும், பாஜகவின் மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சிகளையும் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவு கோரினர் என்றும் அவர் தெரிவித்தார். வேட்பாளரைப் பொறுத்தே தங்கள் முடிவை அறிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். குடியரசு துணைத் தலைவர் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறோம், என்று நட்டா கூறினார்.
கொங்கு மண்டலத்தில் பாஜக பிளான்?
பாஜகவின் இந்த மூவ் தமிழக அரசியலை தாண்டி கொங்கு மண்டலத்தை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இவர் கவுண்டர் ஜாதி பின்னணியை கொண்டவர். அங்கே கவுண்டர் பிரிவு மக்கள் இடையே, மற்ற சில கிளை சாதிகள், பட்டங்கள் இடையே நல்ல பெயர் பெற்றவர். இதன் காரணமாக இவரை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தம் திமுகவிற்கு ஏற்படலாம். கொங்கில் வீக்காக இருக்கும் திமுக இவரை எதிர்ப்பது சிக்கலாக மாறலாம்.
திமுக பாஜகவில் இல்லாத, சிறுபான்மையினர் பின்னணியை கொண்ட ஏபிஜே அப்துல்கலாமையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கவில்லை என்பது அரசியல் வரலாறு. இதனால் என்டிஏ வேட்பாளர் யாராக இருந்தாலும் திமுக அவர்களை ஆதரிக்காது என்பதே அரசியல் வரலாறு. இப்போதும் அதே முடிவை திமுக எடுக்கலாம்.
ஆனால் இந்த முறை கவுண்டர் ஜாதி அரசியலை வைத்து திமுகவிற்கு பாஜக செக் வைத்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் கூட இல்லாத நிலையில் திமுகவிற்கு பாஜக புதிய நெருக்கடியை இதன் மூலம் கொடுத்துள்ளது. கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி (எதிர்காலத்தில் ஜனாதிபதி வாய்ப்பும் வரலாம்) ஆவதை திமுக தடுக்க பார்க்கிறது என்ற கருத்தை பாஜக முன்னெடுக்க வாய்ப்புகள் உள்ளன. இது கொங்கு மண்டலத்தில் வலுவான பிரச்சாரமாகவும் அமையலாம்.
சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டது எப்படி?
பாஜகவின் 11 பேர் கொண்ட நாடாளுமன்ற வாரியம், தலைநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கூடி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட பெயர்கள் குறித்து விரிவாக விவாதித்தது. இந்த வாரியத்தில் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சர்பானந்த சோனோவால், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பி.எல். சந்தோஷ், ஓ.பி.சி. பிரிவு தலைவர் கே. லட்சுமண், சுதா யாதவ், இக்பால் சிங் லால்புரா, சத்யநாராயண் ஜாட்டியா ஆகியோர் உள்ளனர்.
சி.பி. ராதாகிருஷ்ணன் 2023 முதல் 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார். தெலங்கானா மாநிலத்தின் கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார். மேலும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர் கோயம்புத்தூர் தொகுதியிலிருந்து இருமுறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அத்துடன், பாஜகவின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications