சமூக இழிவுகளை துடைக்கும் பணியை.. தோள்மீது ஏற்றிக் கொண்டு பயணித்த.. போராளி.. பெரியார்!
சென்னை: இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகளின் போர்க்குணமிக்க போராளித் தலைவராக நூற்றாண்டை கடந்தும் தந்தை பெரியார் இன்றளவும் கொண்டாடப்படுகிறார். அதே அளவுக்கு அவர் மறைந்து 46 ஆண்டுகளான நிலையிலும் அவரது அன்பார்ந்த எதிரிகள் வசைபாடுவதையும் நிறுத்திவிடவும் இல்லை.
செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த போதும் தாம் வாழும் சமூகத்தில் நிலவுகிற ஒடுக்குமுறைகளை எதிர்த்து துணிந்து களம் கண்டவர் தந்தை பெரியார். ஜாதிகளற்று மதங்களற்று பெருவாழ்வு வந்த ஆதி மனிதர்களாகிய தமிழர்கள்- திராவிடர்கள், 2,000 ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது மனித குலத்துக்கான அநீதி என பொங்கினார்.
சமூக இழிவுகளை துடைக்கும் பணியை எந்த விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து செய்வேன் என மக்களின் விடுதலைக்கான பணியை தம் தோள்மீது ஏற்றிக் கொண்டு பயணித்தார். சமூக விடுதலை, அரசியல் விடுதலை என தாம் கொண்ட கொள்கையில் இம்மியும் விலகாமல் மரணிக்கும் வரை போராடியவர் தந்தை பெரியார்.

துணிச்சலான குரல்
நாடு விடுதலை அடைந்த போது, ஆங்கிலேயர் கைகளில் இருந்து அதிகாரம் மற்றொரு ஜாதியார் கைகளுக்குப் போகிறதே.. இது ஒன்றும் கொண்டாட்டத்துக்குரிய நாள் அல்ல என துணிந்து குரல் கொடுத்தார். தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது தமிழகத்தில் அமைதியை நிலவ செய்ய தந்தை பெரியாரின் வரலாற்றுச் சிறப்ப்புமிக்க பேருரைதான் காரணமாக இருந்தது.

அரசியல் சாசன திருத்தம்
நாடு குடியரசாகி அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போது சாதியை பாதுகாக்கிறது இந்த அரசியல் சாசனம் என கர்ஜித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காக முதலாவது அரசியல் சாசன திருத்தத்தை கொண்டுவரப் போராடினார் தந்தை பெரியார்.

தேடிவந்த பதவிகள்
முதுமையிலும் கைகளில் மூத்திர சட்டியை தூக்கிப் பிடித்தபடி இந்த இன மக்களை சாதிய இழிவில் இருந்து விடுதலை பெறச்செய்யாமல் சாகிறேனே என மனம் வெதும்பியவர் தந்தை பெரியார். தம்மை தேடி அத்தனை அரசியல் பதவிகள் வந்த போதும் அதைப்பற்றி எல்லாம் கிஞ்சித்தும் சபலம் கொள்ளாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாளராக உழைத்தவர்.

காஷ்மீர் முதல் குமரி வரை
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒடுக்கப்படுகிற மக்களின் விடிவெள்ளியாக பூலே, பெரியார், அம்பேத்கர் என்கிற மும்மூர்த்திகளைத்தான் ஜனநாயக சக்திகள் பதாகைகளில் ஏந்துகின்றனர். பெரியார் என்கிற பெருமரம் இல்லாமல் இந்தியாவின் அரசியல் வரலாறும் இல்லை.. இந்திய ஜனநாயகத்தின் சமூக நீதியின் சரித்திர பக்கங்களும் இல்லை.

மக்கள் அணி திரட்டல்
வன்முறையின் மீது சிறிதும் நாட்டமில்லாத ஆகச்சிறந்த புரட்சியாளர் பெரியார் என்பது மிகை இல்லை. மக்களை அணிதிரட்டி மட்டுமே மகத்தான கொள்கைகளை நிறைவேற்றிய மாமேதை தந்தை பெரியார்.

மதவாதம் கவ்வாமல் இருக்க...
அன்று தந்தை பெரியாரும் அவர்தம் சகாக்களும் விதைத்த விதைதான் இன்றளவும் இந்த தமிழ்நிலத்தை மதவாதம் கவ்வாமல் காப்பாற்றுகிற கவசமாக இருக்கிறது. அதனால்தான் மதவாதத்தை எதிர்க்கும் அத்தனை பேரும் தந்தை பெரியார் என்கிற பெயரை உரக்க முழங்குகின்றனர்.

ஈரக்குலை நடுங்குகிறது
இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும் தீரமிக்க போர்க்குணத்தின் குறியீடாக தந்தை பெரியார் திகழ்கிறார். அதனால்தான் அவர் யாரை மாந்தநேயத்தின் எதிரிகள் என அடையாளம் காட்டினாரோ அவர்கள் இன்றளவும் பெரியார் எனும் பெயரை கேட்டாலே ஈரக்குலை நடுங்கியவர்களாக பிதற்றுகின்றனர்.

இவர்தான் பெரியார்
தந்தை பெரியார் ஒரு இயக்கத்தின் அடையாளம் மட்டுமல்ல்.. தந்தை பெரியார் தமிழினத்தின் முகவரி மட்டும் அல்ல.. மனித மாண்புகளை நேசிக்கும் எவர் ஒருவருக்குமே அவர் காலந்தோறும் தந்தையாகவே திகழ்வார்... அத்தகைய மாண்புகளை மிதிக்க விரும்புவோருக்கு அவர் என்றென்றும் எதிரியாகவே வாழ்வார்!












Click it and Unblock the Notifications