"237 கோடியாம்".. மலைக்க வைக்கும் மகளிர் இலவச பேருந்து பயண எண்ணிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் 236 கோடி பயணத்தை பெண்கள் மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் 236 கோடிப் பயணத்தை பெண்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். ஆட்சிக்கு மிகப்பெரிய பேரும் புகழும் வாங்கித் தரும் திட்டமாக இந்த திட்டம் அமைந்துள்ளது என அவர் பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் ஏற்றமிகு 7 திட்டங்களின் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்பு, திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினோம். பொதுக்கூட்டம் என்று சொன்னால், அது அரசியல் காரணங்களுக்காகக் கூட்டப்பட்ட, வழக்கமான பொதுக்கூட்டம் அல்ல.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தால், தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றத்தை நாங்கள் உருவாக்கித் தருவோம் என்பதற்கான மிக முழுமையான திட்டமிடுதலாக அந்தக் கூட்டத்தை கூட்டி இருந்தோம் அதாவது மிகப்பெரிய இலட்சியங்களை விளக்கக் கூடிய மாபெரும் மாநாடாக அது அமைந்திருந்தது. நமது ஆட்சி எத்தகையதாக அமையும் என்பதை நான் சொன்னேன்.

10 ஆண்டு செயல்திட்டம்
அடுத்த பத்தாண்டுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே திட்டமிட்டுச் சொன்னேன். 1.வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு, 2. மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி, 3.குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், 4. அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், 5. அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு, 6. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், 7. உயர்தர ஊரகக் கட்டமைப்பு - உயர்ந்த வாழ்க்கைத்தரம் - இவை தான் அந்த உறுதிமொழிகள்.

7 இலக்குகள்
ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள் என்று அவை திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புர வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய ஏழு இலக்குகளோடு எங்களது பயணம் அமையும் என்று நான் குறிப்பிட்டேன். அந்த இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, முதன்முதலாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினருடன் நான் ஆலோசனை நடத்தினேன். அதில் மிக முக்கியமான ஆலோசனைதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி வழங்குவது! இப்படி அறிவித்தால், ஏற்கனவே நலிவில் இருக்கக்கூடிய போக்குவரத்துத் துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள்.

முதல் திட்டம்
ஆனால் இதனை அறிவித்தால் இலட்சக்கணக்கான மகளிர் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும் என்று நான் சொன்னேன். தேர்தலில் வென்றோம். பதவி பிராமணம் எடுப்பதற்கு முன்னால், என்னென்ன திட்டம் அறிவிக்கலாம் அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள். உடனே நான் சொன்னது மகளிருக்கு இலவச பேருந்து பயணம் தான்.

236 கோடி பயணம்
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவுடன் கோட்டைக்குச் சென்று நான் கையெழுத்து இட்ட முதல் கோப்பு மகளிருக்கு பேருந்து கட்டணம் ரத்து. இதுநாள் வரையில், 236 கோடிப் பயணத்தை பெண்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக, பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இன்றைய தினம் நமது ஆட்சிக்கு மிகப்பெரிய பேரும் புகழும் வாங்கித் தரும் திட்டமாக இது அமைந்திருக்கிறது.

ஆவின் பால்
அடுத்து கையெழுத்து ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்து அதையும் மகளிருக்காக ஏற்படுத்தித் தந்தோம். அதற்கு அடுத்த கையெழுத்து எது என்று கேட்டீர்களானால், கொரோனா காலக்கட்டத்தில் பல குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதனால், 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அன்றைக்கு நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.

2 வது கையெழுத்து
ஆனால், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 4000 ரூபாய் வழங்க இரண்டாவது கையெழுத்து போட்டேன். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக அது அமைந்தது. இந்த வரிசையிலேதான், என்னுடைய கனவுத் திட்டமான இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றக்கூடிய திட்டமாக இருப்பது 'நான் முதல்வன்' திட்டம்!

நான் முதல்வன் திட்டம்
கழக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான தொழில் நிறுவனங்களை சார்ந்திருக்கக்கூடிய முதலீடுகள் வந்து சேர்ந்தன. அப்போது பல்வேறு தொழிலதிபர்களோடு உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கினாலும் அதில் பணியாற்ற திறமையான இளைஞர்கள் கிடைப்பது இல்லை என்று தொழிலதிபர்கள் சிலர் என்னிடத்தில் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதைக் கருத்தில் கொண்டு என் மனதில் உருவான திட்டம்தான் நான் முதல்வன் என்ற திட்டம்.

17 லட்சம் திறமைசாளிகள்
தமிழ்நாட்டு மாணவர்களை இளைஞர்களை கல்வியில் - அறிவாற்றலில் சிந்தனைத் திறனில் - பன்முக ஆற்றலில் முன்னேறியவர்களாக ஆக்குவதற்காக இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி வைத்தேன். இந்த ஓராண்டு காலத்தில் 1300-க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியில் கல்லூரிகளைச் சார்ந்திருக்கக்கூடிய 17 இலட்சத்திற்கும் அதிகமான திறமைசாலிகளை பயின்றும், பயிற்றுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

2 லட்சம் கோடி புதிய முதலீடு
தமிழ்நாட்டு இளைஞர்களை உலகில் முதன்மையானவர்களாக ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுறை தலைமுறைக்குப் பயன்படும் திட்டம்! ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். இதுவரையில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.

குடிநீர் திட்டங்கள்
2563 கோடி ரூபாய் மதிப்பிலான ஊரக குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மழையின் காரணமாக நீர்வளம் பெருகி உள்ளது. வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத அளவில் வேளாண் பரப்பு அதிகமாகி, விளைச்சலும் அதிகமாகி இருக்கிறது. நாம் செயல்படுத்திவரக்கூடிய திட்டங்களால் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை மிகுந்த ஊக்கத்தை அடைந்து வருகின்றன.

பாதாள சாக்கடைத் திட்டம்
18,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 446 குடிநீர்த் திட்டப் பணிகளும், 4499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 பாதாள சாக்கடைத் திட்டங்களும் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 49,385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

7 முக்கிய திட்டங்கள்
பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற முதல் கையெழுத்தாகட்டும், அடுத்து அறிவிக்க இருக்கின்ற மகளிருக்கான உரிமைத் தொகையாகட்டும், அனைத்துமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாக அமைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஏழு முக்கியமான திட்டங்களை இன்றைக்கு நான் தொடங்கி வைக்கிறேன்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications