தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 3 தொகுதிகள் மாறுது.. லோக்சபா தேர்தலில் திமுக வைத்த ட்விஸ்ட்
சென்னை: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற 8 தொகுதிகளில் 3 தொகுதிகளை, இந்த முறை மாற்றித்தர திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த கட்சிகள் அப்படியே கடந்த 2019-ம் ஆண்டிலும் தொடர்கின்றன. அதன்படி இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதுதவிர கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம் பெற்று இருந்த மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, சமத்துவ மக்கள் கழகம் போன்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கின்றன.

கூட்டணிகளுக்கான பேச்சு வார்த்தையை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் பொன்முடி, ஆ.ராசா எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய குழுவினர், கூட்டணி கட்சியை சேர்ந்த தொகுதி பங்கீட்டு குழுவினருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் (உதய சூரியன் சின்னம்) ஒதுக்கப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் கடந்த முறை போலவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் அந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற விவரம் இதுவரை வெளியாகிவில்லை.
இதனிடையே மதிமுகவிற்கு ஒரு இடமும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகளுக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மதிமுகவுக்கான தொகுதி விவரம் வெளியாகவில்லை. கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தங்களுக்கு தொகுதி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்து வந்தது. ஆனால் கமலுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை.. மாறாக மக்கள் நீதி மய்யத்துக்கு, ராஜ்ய சபா எம்பி தேர்தலில் ஒரு இடம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திமுக கூட்டணியை ஆதரித்து அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன் என்று நேற்று முன்தினம் கமல்ஹாசன் அறிவித்தார். கூட்டணியில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த திமுகவிற்கு காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க பெரும் சவாலாக இருந்ததாம். தொகுதி எண்ணிக்கை காரணமாக இழுபறியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரியில் ஒன்றும் என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கான இடங்களை குறைக்க திமுக திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது இதன்படி அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் 6 தொகுதிகளும், புதுச்சேரி சேர்த்து மொத்தம் 7 தொகுதிகள் ஒதுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது... அதே நேரம் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து வாங்க காங்கிரஸ் மறுத்துவிட்டதாம்.
அதே நேரம் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய திமுக தலைமை, கடந்த லோக்சபா தேர்தலை போன்று தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.
இதன்படி திமுக கூட்டணியை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 18 இடங்களை பகிர்ந்து அளித்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் இறங்க உள்ளது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இதனிடையே கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற 8 தொகுதிகளில் 3 தொகுதிகளை, இந்த முறை மாற்றித்தர திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, சிவகங்கை, விருதுநகர், கரூர் மற்றும் திருச்சி என 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 இடங்களில் போட்டியிட்டது. இதில், தேனி தொகுதியை தவிர எஞ்சிய 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி கடந்த முறை வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தற்போதும் தமிழகத்தில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி ஒரு தொகுதி என 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் அந்த தொகுதிகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுக 2 தொகுதிகள் விரும்பிய நிலையில், ஒரு தொகுதி தான் இந்த முறை திமுக ஒதுக்கியது. அதேநேரம் மதிமுக விரும்பும் தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் மதிமக விரும்பும் அந்த ஒரு தொகுதியானது தற்போது காங்கிரஸ் கையில் இருக்கிறதாம். அந்த தொகுதியுடன், இன்னும் 2 தொகுதிகளை மாற்றித்தர திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 3 தொகுதிகள் மாறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகள் மாறும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications