வந்துச்சு பாருங்க செம அறிவிப்பு.. ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை! இன்னும் விண்ணப்பிக்கலயா? இத படிங்க
சென்னை: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான 2 ஆம் கட்ட முகாம் முடிவடைய உள்ள நிலையில், விண்ணப்பிக்காதவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்கப்பட உள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு இதனை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என அறிவித்து முகாம்களை தொடங்கியது.

ஜூலை மாதம் தொடங்கப்பட்டு முதல் கட்ட முகாம் ஆகஸ்டு 4 ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் 2 ஆம் கட்ட முகாம் தொடங்கியது.
ஒருபக்கம் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மறுபக்கம், 2 ஆம் கட்ட முகாமும் நிறைவடைய உள்ளது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. பல்வேறு காரணங்களால் 2 ஆம் கட்ட முகாமிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறது.
ஆம், 2 முகாம்களிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளன. ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் அதில் விண்ணபிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியான பெண்கள், ஏற்கனவே நடைபெற்ற 2 முகாம்களில் வருகை தர இயலாத குடும்பத் தலைவிகள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும். திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இதை பெறலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும். என்று அரசு தெரிவித்து இருக்கிறது.
வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள்." இந்த உரிமைத் தொகையை பெற முடியாது.
சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்து உள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே விதவை ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இதனை பெற முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.












Click it and Unblock the Notifications