பச்சை, ஆரஞ்சு, ஊதா! கொடைக்கானலில் 3 கலர்களில் இ பாஸ்! QR கோடில் ஏன் வித்தியாசம்
சென்னை: கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு 3 வகையான அடையாள கோடுகளுடன் கூடிய இ பாஸ் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பதிவுசெய்து வர வேண்டும்.

சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர எந்த தடையும் இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். epass.tnega.org என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நீலகிரி செல்ல விரும்பினால் அந்த இடத்தை தேர்வு செய்து உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஒரு வேளை கொடைக்கானல் செல்கிறீர்கள் என்றால் அந்த இடத்தை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் போதே நீங்கள் எந்த வாகனத்தில் பயணிக்கிறீர்கள், எத்தனை பேர் பயணிக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்க போகிறீர்கள், எங்கு தங்க போகிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இந்த தங்குமிடத்தில் தங்கும் இடம் எங்களுக்கு தெரியும், தங்கும் இடம் இன்னும் தெரியாது ஆகிய இரு ஆப்ஷன்கள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்ட இணையதளத்தில் சுற்றுலா பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ பாஸ் பதிவு செய்து கொடைக்கானலுக்கு வரலாம்.
இ பாஸ் தேவைப்படுபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தால் ஆட்டோ ஜெனரேட் மூலம் இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசு பேருந்துகளின் விபரங்கள் மற்றும் பயணிப்பவர்களின் விவரங்கள் நேரிடையாக போக்குவரத்துத் துறை மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இ பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த இ பாஸ் 3 வகையான அடையாள கோடுகளுடன் வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு பச்சை நிற அடையாள கோட்டுடனும் வேளாண், விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அத்தியாவசியத் தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாள கோட்டுடனும் சுற்றுலா , வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோட்டுடனும் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகராட்சியின் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ பாஸ் பெற்று கொள்ள வேண்டும். வெள்ளி நீர் வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச் சாவடியில் இ பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னர் கொடைக்கானலுக்குள் செல்ல இன்று முதல் அனுமதிக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications