தமிழக தேர்தலில் வெளிநாட்டவர்கள் 3 பேர் வாக்களித்தது எப்படி? "மை"யால் மாட்டிய பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 3 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்த போதும், இவர்கள் வாக்களித்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விரலில் இருந்து மை மூலமாக வாக்களித்தது குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜித்தேந்திரநாத். 38 வயது இன்ஜினியரான இவர், கனடாவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு ஜிதேந்திரநாத் மனைவி மற்றும் மகனுடன் கனடா சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அண்மையில் சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஜிதேந்திரநாத் சென்னை வந்துள்ளார்.

கள்ள ஓட்டு - சிக்கியது எப்படி?
மீண்டும் கனடா செல்ல சென்னை விமான நிலையம் வந்தபோது குடியுரிமை அதிகாரிகள் அவரது கை விரலில் இருந்த மையை பார்த்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது அவர் தி.நகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாததால் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டு போட்ட தாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் கேகே நகர் போலீசாரிடம் ஜித்தேந்திரநாத்தை ஒப்படைத்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதேபோல் இலங்கையைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இரட்டை குடியுரிமை
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சார்லி பாலச்சந்திரன். 68 வயதாகும் இவர் இலங்கையிலிருந்து கடந்த 1986ஆம் ஆண்டு இந்தியா வந்து கேரளாவைச் சேர்ந்த அண்ணம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டவர். 2015ஆம் ஆண்டு கொடுங்கையூர் பகுதியில் வசித்தபோது வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பெரம்பூர் சட்டசபை தொகுதி வாக்கை செலுத்தியுளளார். அதன் பிறகு கடந்த 1ஆம் தேதி இலங்கை சென்று விட்டு நேற்று சென்னை விமான நிலையம் வந்த போது குடியுரிமை பணி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது இவர் இடது கை ஆள்காட்டி விரலில் வாக்கு அளித்ததற்கான மை இருந்ததை கண்டு குடியுரிமை பணி அதிகாரிகள் இலங்கையை சேர்ந்த நபர் இந்தியாவில் வாக்களித்தது எப்படி என கேட்டுள்ளனர்.
புழல் சிறையில் அடைப்பு
அதற்கு சார்லி பாலச்சந்திரன், 1986 முதல் இந்தியாவில் தான் உள்ளதாகவும் குடியுரிமையை இன்னும் மாற்றவில்லை.. இலங்கை குடியுரிமையும் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு குடியுரிமை பணி அதிகாரிகள் இலங்கையை சார்ந்த நபர் இந்தியாவில் வாக்களித்தது சட்டப்படி குற்றம் எனக் கூறி கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததனர்.
பின் சார்லி பாலச்சந்திரனை கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவருக்கு மே 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் நேற்றிரவு ஆஸ்திரேலியா செல்ல வந்த விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர ரகுபதி சென்னை விமான நிலைய குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் பிடுபட்டார்.
பரபரப்பான சென்னை விமான நிலையம்
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறியுள்ளார். பின் ஆஸ்திரேலியா சென்றவர் 1997ஆம் ஆண்டு அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். கடந்த மார்ச் 17ஆம் தேதி சென்னை வந்து விருகம்பாக்கத்தில் தங்கியிருந்துள்ளார். வாக்காளர் பெயர் பட்டியலில் இவருடைய பெயர் இருப்பதாக இவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சந்திரசேகர ரகுபதி இந்திய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தியுள்ளார். அவரை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications