முதுமலையில் டி23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய 3 தமிழக வனத்துறையினருக்கு சிறந்த களப்பணியாளர் விருது
சென்னை: தமிழகத்தை சேர்ந்த 3 வனத்துறை ஊழியர்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வழங்கப்படும் சிறந்த களப்பணியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜூலை 29 ஆம் தேதி ஆண்டுதோறும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் புலிகள் காப்பகம், சரணாலயத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறந்த களப்பணியாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகள் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய வனத்துறையினருக்கு விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அது போல் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது.

முதுமலை புலிகள் சரணாலயம்
முதுமலை புலிகள் சரணாலயத்தில் புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் கண்காணிக்கும் குழு உள்ளது. இந்த குழுவை சேர்ந்த பொம்மன், மதன், மீனா காலன் ஆகிய 3 பேருக்கும் தேசிய புலிகள் காப்பக ஆணையம் விருது வழங்குகிறது. இவர்களுக்கு வரும் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் சந்திரபூர் வனத்துறை அகாதெமியில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் விருதை வழங்குகிறார்.

வனத்துறை அதிகாரிகள்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது முதுமலை புலிகள் சரணாலயத்தில் டி23 புலியை உயிருடன் பிடித்ததில் இவர்கள் மூவரும் முக்கிய பங்காற்றினர். இவர்கள் மூவரும் தினந்தோறும் காலை நேரங்களில் அந்த புலியின் இருப்பிடம் குறித்த தகவல்களையும் அதன் காலடி தடம் மற்றும் இதர சமிக்ஞைகள் குறித்து தகவல்களை கொடுப்பர்.

டி 23 புலி
அதனை வைத்தே டி23 புலியை தேடும் பணிகள் தீரவிமடைந்தன. இதையடுத்து அந்த புலி ஒரு வழியாக பிடிபட்டது. இந்த பணியில் மேற்கண்ட 3 ஊழியர்களும் மிக முக்கிய பங்காற்றியுள்ளதால் அவர்கள் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த தகவலை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு ஐஏஎஸ்ஸும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டு
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தமிழக வனத்துறைக்கு மிகவும் பெருமையான தருணம். புலி வேட்டை தடுப்பு கண்காணிப்பு குழுவினர் பொம்மன், மதன் மற்றும் மீனா காலன் ஆகியோர் உலக புலிகள் தினத்தன்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் வழங்கப்படும் சிறந்த களப்பணியாளர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மூவரும் டி23 புலியை கண்டுபிடிப்பதில் மாபெரும் பங்காற்றினார்கள் என்றும் சுப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

டி23 பிளாஷ்பேக்
நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினக்குடி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுற்றி திரிந்த 13 வயது டி 23 புலி 4 பேரை வேட்டையாடியது. அது போல் ஏராளமான கால்நடைகளை வேட்டையாடி கொன்றது. இந்த புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் 20 நாட்களுக்கு மேலாக இந்த புலியை பிடிக்க வனத்துறையினர் போராடி ஒரு வழியாக பிடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications