தமிழகத்தில் மேலும் புதிதாக 3 சுங்கச்சாவடிகள் திறப்பு! கட்டணங்கள் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் புதிதாக 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திறந்துள்ளது. இவற்றிற்கான கட்டணத்தையும் நிர்ணயித்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் நங்கிளிகொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதியதாக சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த சுங்கச்சாவடிகளுக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் நங்கிளிகொண்டான் சுங்கச் சாவடியில் ஒரு முறை வாகனங்கள் சென்று வர ரூ 60 முதல் ரூ 400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் சென்று திரும்ப (return toll) ரூ 95 முதல் ரூ 600 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அது போல் திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலத்தில் ஒரு முறை வாகனங்கள் சென்று வர 55 ரூபாய் முதல் 370 ரூபாய் வரையும் ஒரே நாளில் சென்று திரும்ப ரூ 85 முதல் ரூ 555 வரையும் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டியில் ரூ 60 முதல் 400 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 49 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கூடுதலாக 3 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளுக்கு கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications