** நான் யாரு தெரியுமா? ரிச்சி ஸ்ட்ரீட்டில் யூட்யூபருக்கு மிரட்டல்!’கிக்கில்’ அத்துமீறிய மூவர் கைது!
சென்னை: சென்னையின் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் மார்க்கெட் பகுதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில் பிரபல யூடியூபர் A2D நந்தகுமாரை மதுபோதையில் மிரட்டல் விடுத்ததோடு, அவரது கேமராவை பறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றது. தமிழகத்தின் தலைநகரிலேயே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மூவரை கைது செய்துள்ளனர் சென்னை பெருநகர காவல்துறையினர்.
சென்னை அண்ணா சாலை முடிவடையும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புறம் ஒரு சிறிய சந்து போல ரிச்சி ஸ்ட்ரீட் உள்ளது. இங்கு செல்போன்கள், லேப்டாப்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிக அளவில் விற்கப்படுகிறது.

சென்னையின் எலக்ட்ரானிக்ஸ் சந்தையாகவும் இது பார்க்கப்படுகிறது. இங்கு கிடைக்கும் பொருட்கள் விலை குறைவானதாகவும், பிராண்டுகளின் ஃபர்ஸ்ட் காப்பி விற்கப்படுவதாலும் ஏராளமானோர் அங்கு குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் பிரபல யூட்யூபரான நந்தகுமார் அங்கு சென்றிருக்கிறார். இவர் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த தகவல்களை தனது A2Dyoutube சேனலில் வழங்கி வருகிறார். இவரை பல ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்கின்றனர். அது மட்டும் அல்லாமல் புதிதாக சந்தையில் வெளியாகி இருக்கும் செல்போன்கள், லேப்டாப்கள், கேட்ஜெட்கள் குறித்து ரிவ்யூகளையும் தனது சேனலில் வழங்கி வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் பயணம் செய்து தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் சந்தையான ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு சென்றபோதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. தனது நண்பருடன் கேமராவில் வீடியோ எடுத்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததோடு தான் மிகப்பெரிய ரவுடி.. தான் சொன்னால் அனைவரும் வந்து விடுவார்கள்.. எனக்கூறி ஆட்டோ ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றார்.
அந்த ஆட்டோவில் மேலும் சிலர் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மிரட்டி கேமராவை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அங்கிருந்த ஒருவர் மது போதையில் இருந்த இளைஞர்களிடம் பேசி கேமராவை பெற்று தந்தார். இதை அடுத்து தனது சேனலில் அந்த வீடியோவை யூடியூபர் நந்தகுமார் வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த வீடியோவை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்தனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நடந்த இரண்டாவது நாளே தலைநகர் சென்னையில் போதையில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவது சட்டம் ஒழுங்கு இல்லாத நிலையை வெளிப்படையாக காட்டுவதாக அதிமுகவினரும் நாம் தமிழர் கட்சியினரும் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தனர்.
மேலும் பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி இந்த வீடியோவை ட்விட்டரில் சென்னை காவல் துறையை டேக் செய்து வெளியிட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை உறுதியளித்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், பார்த்திபன், கிஷோர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications